Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தினம் தினம் தித்திக்கும் மன்னா..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: தினம் தினம் தித்திக்கும் மன்னா..!
Permalink  
 


கர்த்தருக்கு பயப்படும் பயம்

''...நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.''(எசேக்கியேல்.36:9) - எனும் இந்த வசனத்தை தியானிக்கையில் கர்த்தர் நம்மை பண்படுத்தும் விதம் எப்படியானது, அவர் எதன் மூலம் பண்படுத்துகிறார் என்று யோசித்ததன் விளைவாக மூன்று விசேஷித்த தெய்வீக குணாதிசயங்கள் நாம் பண்பட ஏதுவாகவும் அதற்கு ஆதாரமாகவும் இருப்பதான சிந்தனை வெளிப்பட்டது; அதில் முதலாவதாக நம்மைப் பண்படுத்துவதற்கு தேவன் தமது அன்பை ஆதாரமாக வைத்திருக்கிறார் என்று பார்த்தோம்; இன்று கர்த்தருக்கு பயப்படும் பயத்தினால் எப்படி ஒரு கர்த்தருடைய இருதயமானது பண்படுகிறது என்பதை தியானிக்கப் போகிறோம்.

images?q=tbn:ANd9GcRCNzUFyXxaKMgdz-RuhdP_w7-7h5BZijcDqkUEcykPcT7FbIYb

நம்மைச் சுற்றிலுமுள்ள மக்களிடையே தேவ பயமில்லை; அவர்கள் தங்களை பக்திமான்களைப் போலக் காட்டிக் கொண்டாலும் தங்கள் செயல்களால் அவரை வேதனைப்படுத்துகிறார்கள்; இதனால் தேவன் இல்லை,
இல்லை,இல்லவே இல்லை என்று தெருவுக்குத் தெரு பிரச்சாரம் செய்யும் நாத்திகர்களைவிட தேவனைக் குறித்த சிந்தனையோ அதன் பாதிப்போ தேவபயமோ இல்லாதோரே உண்மையில் தேவனை மறுதலிக்கிறார்கள்; தேவன் இல்லை என்று சொல்பவர்களல்ல, தங்கள் அன்றாட வாழ்க்கையில் கர்த்தருக்கு பயப்படும் பயமில்லாமல் துன்மார்க்கமாக வாழுவோரே அவரை மறுதலிப்போராவர்; இந்த காரியத்தில் கிறித்தவர்களும் விதிவிலக்கல்ல; அவர்களும் கூட தவறாமல் ஆலயத்துக்குச் செல்வோராகவும் அனைத்து மார்க்கக் கடமைகளையும் நேர்த்தியாகச் செய்வோராகவும் தங்களைக் காட்டிக்கொண்டாலும் தங்கள் செயல்களால் ஒவ்வொரு நாளும் அவரை சிலுவையிலறைகிறார்கள்.

காரியத்துக்கு வருவோம், நம்முடைய நிர்பந்தமான நிலைமைகளையறிந்த இரட்சகர் நம்மைப் பண்படுத்தி விதைக்க விரும்புகிறார்;அதற்கு ஏதுவாக கர்த்தருக்கு பயப்படும் பயம் எனும் விசேஷித்த குணாதிசயத்தை நம்மில் சிருஷ்டிக்க விரும்புகிறார்;கர்த்தருக்கு பயப்படும் தன்மையானது பயன்படும் நன்மையாக மாறும்; ஏனெனில் பொல்லாப்புகளும் தீயவழிகளுமே நம்மை தேவபயத்திலிருந்து தூரமாக்குகிறது எனில் நாம் அதை விட்டுவிட்டு கிருபையைப் பெற்றுக்கொள்ளவேண்டும்; கிருபை என்பது பாவத்திலிருந்து விலகுவதற்காகவே தரப்படுகிறதேயன்றி பாவத்தில் நிலைத்திருக்க அல்ல‌.

images?q=tbn:ANd9GcTfrRSQgFJY9zPxeTc5YVeimIT90leGOz_E_dnWbZ60tZSKVqV7

அரசாங்கம் தரும் விளம்பரங்களில், "தண்ணீரை வீணாக்காதீர், மின்சாரத்தை சேமிப்பது அதனை உற்பத்தி செய்வதற்கு சமானம்" என்றெல்லாம் கூறப்படுவதுண்டு; நாம் சொல்லுவோம், "பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்." (யோனா.2:8) ஆம், கிருபையைப் பெருகச் செய்யும் கிரியைகளில் கவனம் செலுத்தாமல் கிருபையைப் பயன்படுத்தி தப்பிக்கும் காரியங்களிலேயே கவனம் செலுத்துவோமானால் தலைதலைமுறைக்குமாக வாக்களிக்கப்பட்ட கிருபையின் நிலை என்னவாகும்?

கிருபையைப் பெருகச் செய்துகொள்ள உதவும் ஆதாரங்களில் பிரதானமானது கர்த்தருக்கு பயப்படும் பயமே; நாம் கர்த்தருக்கேற்றவிதமாகப் பண்படவும்  இது உதவுகிறது; இதோ சில வசனங்களின் அடிப்படையில் கர்த்தருக்கு பயப்படும் பயமாவது என்ன என்றும் அதன் பலன் என்ன என்றும் பார்ப்போம்.

images?q=tbn:ANd9GcRzz3KBw0nST-Hmd_yK_-y5cE9TlD7U4KIhPGwjNhySobDa8kul

"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்." (நீதிமொழிகள்.1:7)

"தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்.,"(நீதிமொழிகள்.8:13)

"கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்." (நீதிமொழிகள்.10:27)

"கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்."  (நீதிமொழிகள்.14: 26, 27 )

"சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்." (நீதிமொழிகள்.15:16  )

"கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை." (நீதிமொழிகள்.15:33  )

"கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்." (நீதிமொழிகள்.16:6)

"கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது."  (நீதிமொழிகள்.19:23 )

"தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம். " (நீதிமொழிகள்.22:4 )

"மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்." (நீதிமொழிகள். 29:25 )

மேற்கண்ட அனைத்து வசனங்களும் நீதிமொழிகளிலிருந்து மாத்திரமே எடுக்கப்பட்டிருக்கிறது; இந்த வசனங்களுக்கு எந்த விதமான தொடர்விளக்கங்களுக்கும் அவசியமிராது; இதனை நம்முடைய அன்றாட வாழ்வில் கைக்கொண்டு நடந்தோமானால் கர்த்தருக்கு பயப்படும் பயம் எனும் இந்த சிறப்பான குணாதிசயமே நம்மைக் கர்த்தருக்கேற்ற விதமாகப் பண்படுத்தும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

biblehands.jpg


ஜெபம்:
எங்களை அதிகமாக நேசிக்கிற பரலோகப் பிதாவே,கர்த்தர் தாமே எங்களைப் பண்படுத்த விரும்பி எங்களுக்குக் கொடுத்துள்ள தேவ பயத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்;இந்த நற்குணத்தினால் நாங்கள் சத்துருவின் சூழ்ச்சிகளிலிருந்து தப்பிப் பண்படவும் உமக்காக ஆயிரம் பதினாயிரமாகப் பெருகவும் உதவிசெய்வீராக;இயேசுகிறித்துவின் நாமத்தில் ஜெபங்கேளும் நல்ல தகப்பனே,ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

தேவ அன்பினால் பண்பட்ட இருதயம்..!

''...நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.'' (எசேக்கியேல்.36:9) எனும் நல்லதொரு வாக்கியத்தின் ஆதாரத்தில் தியானித்துக் கொண்டிருக்கிறோம்; விதைக்க ஆயத்தமாக்கப்பட்ட ஒரு நிலத்தில் பண்படுத்தப்பட்ட ஒரு விதையானது விதைக்கப்படுமானால் பலன் மிகுதி -யாக இருக்கும் என்பது பொதுவான பிரமாணமாகும்; அதனை விளையச் செய்வது சிருஷ்டிகருடைய அநுக்ரஹமாகும்; அதுபோலவே ஒரு கர்த்தருடைய பிள்ளையின் வாழ்க்கை பயனுள்ளதாக அமைய வேண்டுமானால் அவன் அல்லது அவளுடைய இருதயமானது பண்பட வேண்டும் என்பது ஆண்டவருடைய ஆலோசனையாகும்; நாம் பண்பட ஏதுவாக மூன்று விசேஷித்த காரியங்களை ஆதாரமாக தியானத்துக்கு எடுத்துக்கொண்டோம்; அதில் பிரதானமானது தேவனுடைய அன்பு.

elephant-heart-plum-seed.jpg

எந்தவொரு ஆத்துமாவையும் பண்படுத்த அவசியமானது தேவனுடைய அன்பாகும்; அன்பினால் மட்டுமே எந்தவொரு இருதயமும் பக்குவமடைகிறது; அன்பு நிறைந்த இருதயம் நன்மை வரும்வரை பொறுமையாகக் காத்திருக்கும்; அன்பு நிறைந்த இருதயம் மட்டுமே மன்னிக்கும் தன்மையால் நிறைந்திருக்கும்; அன்பு நிறைந்த இருதயம் மட்டுமே பாவத்தை விட்டு விலகி ஓடும்; இவையெல்லாம் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள அல்லது பண்படுத்திக்கொள்ள விரும்பும் ஒரு ஆத்துமாவுக்காக தேவன் நியமித்துள்ள ஆதார அம்சங்களாகும்; இதற்கு ஆதாரமாக பவுலடிகள் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, "கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே." (1தீமோத்தேயு.1:5) என்று கூறுகிறார்;

இதன்படி ஒரு ஆத்துமா தன்னைப் பண்படுத்திக்கொள்ள ஏதுவாக தேவன் தமது அளவற்றை அன்பினால் ஒரு ஆவிக்குரிய மனுஷனுடைய இருதயத்தை நிறைக்கிறார்;அப்படிப்பட்ட அன்பு உருவாக தேவைப்படும் ஏதுகரங்களைக் குறித்து மேற்காணும் வாக்கியம் கூறுகிறது; அன்பினால் இருதயம் உருவாக்கப்ப‌டுகிறது, பண்படுகிறது, சிந்திக்கிறது, உறுதியாகிறது; இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட தேவ அன்பின் அடையாளமாவது, அது ஒருபோதும் வெட்கப்படுத்தாது; "மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. " ( ரோமர்.5:5)

அது ஒருபோதும் பலன் சார்ந்ததாக இருக்காது; இந்த உலகிலுள்ள அன்பு எப்போதும் பிரதிபலன் சார்ந்ததாகவே இருக்கிறது; ஆனால் தேவனுடைய அன்பானது இயல்பாக வருகிறது;உதாரணத்துக்கு சாலையில் ஒரு மனுஷன் திடீரென ஒரு விபத்தில் சிக்கிவிட்டால் அவன் யார் என்ன சாதி என்றெல்லாம் பாராது இன்னொரு மனுஷன் ஓடிச் சென்று தூக்கினால் - உதவிசெய்தால் -முதலுதவி செய்தால் அது ஒவ்வொரு சிருஷ்டியிலும் கர்த்தர் வைத்துள்ள தமது அன்பின் வெளிப்பாடாகும்.

"அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்...அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்." (1.யோவான்.4:8,19)

இங்கே தேவனுடைய அன்பாக வேதம் சொல்லுவது சாதாரண மனிதப் புரிதலில் வழங்கப்படும் அன்பு அல்ல; அது ஏற்கனவே இங்கே அறியப்பட்ட வண்ணமாக பலன் சார்ந்ததாகவோ அல்லது பிரதியானதாகவோ இருக்கிறது; அதாவது நம்மை ஒருவர் நேசித்ததன் பாதிப்பில் அல்லது நாம் மற்றொருவரிடமிருந்து பெற்ற அல்லது பெறப்போகும் ஒரு நன்மையின் அடிப்படையில் அன்பு செலுத்துவது மனித அன்பாகும்; ஆனால் தேவனுடைய அன்பு நிபந்தனையற்றதாகவும், மாறிப்போகாததுமாயிருக் கிறது; இதன் காரணமாகவே பாவத்துக்குரிய தண்டனை என்பது மன்னிப்பாக மாறி அந்த தண்டனையைக் கர்த்தரே ஏற்றுக்கொண்டார்; இதுவே தேவ அன்பின் உச்சக்கட்டமாகும்; இதைப் போன்ற அன்பு நமக்குள்ளிருந்து வெளிப்படுவதே நாம் பண்படுகிறோம் என்பதற்கு அடையாளமாகும்.

1083.jpg

"மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்." (யோவான்.12:24 )

இங்கே ஒரு விதையானது தேவ அன்பினால் பண்பட்டு தன்னை மறைத்துக்கொண்டு விதைக்கப்படுவதால் உண்டாகக்கூடிய பலனைக் குறித்து ஆண்டவர் சொல்லுகிறார்; அதன் பலன் மிகுதியாக இருக்குமாம்; கர்த்தர் தாமே நாம் இப்படிப்பட்ட தேவ அன்பில் பெலப்பட உதவி செய்வாராக‌.

ஜெபம்:
எங்களை நேசிக்கிற அன்பின் பிதாவே,தம்முடைய பெரிதான கிருபையால் எங்களை உமக்காகத் தெரிந்துகொண்டதற்காக நன்றி செலுத்துகிறோம்; நாங்கள் தமது அன்பில் வேரூன்றியவர்களாகவும்  அன்பில் பரிசுத்தமுள்ள வர்களாகவும் விளங்கி உமது அன்பினால் பண்பட உதவிசெய்யும்; மாயைக்கும் கபட்டுவசனிப்புக்கும் எங்கள் நாவை விலக்கிக் காத்துக் கொள்ளும்; நாங்கள் பண்பட்டு விதைக்கப்பட்டு மிகுந்த பலனை உமக்காகக் கொடுக்க பெலன் தாரும்; இயேசுகிறித்துவின் நாமத்தில் பிதாவே, ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

பண்படுத்தப்பட்டு...

''...நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள். '' (எசேக்கியேல்.36:9)


கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான வாசக நண்பர்களே,
நீங்கள் இந்த தியானப் பகுதியில் பங்கேற்காவிட்டாலும் - கருத்து எதுவும் சொல்லாவிட்டாலும் வாசித்துச் செல்லுகிறீர்கள் என்ற நம்பிக்கையுடன் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்; இந்த அன்றாட ஊழியத்தை தவறாது செய்ய எனது ஆரோக்கியமான மனநிலைக்காகவும் நல்ல தேவ ஆவியின் நடத்துதலுக்காகவும் தயவுசெய்து ஜெபித்துக்கொள்ளுங்கள்.

anointing%20oil%20card.gif

இன்றைய தியானத்துக்காக அடியேன் முன்வைத்துள்ள வாக்கியத்தை ஒரு குறிப்பிட்ட ஊழியத்தில் செய்தியினிடையே போகிற போக்கில் விவரித்தேன்; அது என் மனதுக்கு திருப்திகரமாக இருந்தமையால் அதனை இன்றைய தியான வாக்கியமாக ஆவியானவரின் துணையோடு எடுத்துக்கொண்டேன்.

வசனம் சொல்லுகிறது,''...நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள் ''. அதாவது எப்படி ஒரு விதையை பதப்படுத்தாவிட்டால் அதன் நோக்கம் நிறைவேறாதோ அதுபோலவே பண்படாத - பதப்படாத எந்தவொரு ஆத்துமாவும் தேவனுடைய சுதந்தரங்களை இறுதி செய்து - உறுதிசெய்து கொள்ளமுடியாது.

"விதையானது மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போயிற்று; பயிர் தீய்ந்து போகிறதினால் பண்டசாலைகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோயின."(யோவேல்.1:17)

newsletterbanner-seedgrowthsq.jpg

இது சபையைக் குறித்த தேவனுடைய இருதயத்தின் இரத்தம் கசியும் குமுறல்; என்னை தேவன் தமக்காகத் தேர்ந்தெடுத்தபோது என்மீது எவ்வளவு எதிர்பார்ப்புகளுடனும் தரிசனத்துடனும் எனக்கு கிருபைகளைக் கொடுத்தார்; நான் அவற்றையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறேனா, அதைக் குறித்து கரிசனை கொண்டேனா? அல்லது என் தனிப்பட்ட காரியம் ஒன்று நிறைவேறுவதற்காக ஆண்டவரிடம் வந்த நான் அந்த காரியம் நிறைவேறியதும் அனைத்து அபிஷேகத்தையும் பொருத்தனையையும் விட்டு அகன்று போனேனா?

Jesus-sowing-seed.jpg

இதுவே ஆண்டவருடைய இருதயத்தின் பாரம்; ஆண்டவர் பிள்ளையில்லாத ஆபிரகாமுக்கு பிள்ளையை மாத்திரம் தரவில்லை, அவனுக்கு தரிசனத்தையும் கொடுத்தார்; ஆபிரகாம் பெற்ற பிள்ளையின் மூலம் நிறைவேற வேண்டிய ஆண்டவருடைய திட்டம் ஒன்றும் அதனுடன் இணைந்திருந்தது;அது ஈசாக்கின் வழியாக அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடந்துசென்றபோதெல்லாம் ஆண்டவர் மகிழ்ந்தார்; அந்த ஓட்டம் தடைபட்டபோதெல்லாம் கர்த்தருடைய இருதயம் தவித்தது; எப்படியாவது எழுந்துவிடமாட்டானா, உணர்வடைய மாட்டானா என்று ஆண்டவர் பற்பல தீர்க்கதரிசிகள் மூலமாக இடைபட்டுக் கொண்டே இருந்தார்.

இந்த கடைசி காலங்களில் தமது அன்பின் குமாரனின் வழியாக நம்முடன் நேரடியாகவே இடைபடுகிறார்; ''...நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள். '' எனும் வாக்கியத்தின் மையப் பகுதியே பண்படுதல் என்பதே;அதன்பிறகே விதைக்கப்படுதலும் விளைச்சலும் மிகுதியான பலனும் உண்டாகும்.

ஒரு விசுவாசியை கர்த்தர் எப்படியாகப் பண்படுத்துகிறார் என்பதையே சுருக்கமாக தியானிக்கப்போகிறோம்; பண்படுதல் என்பதன் ஆவிக்குரிய பொருளில் ஒரு ஆத்துமா தேவனுக்காக ஆயத்தப்படுதல் என்று கொள்வோமானால் எந்தவொரு ஆத்துமாவும் பண்படுவதற்கு மூன்று முக்கிய அம்சங்களை ஆதாரமாக ஆவியானவர் வைத்திருக்கிறார்; இம்மூன்றின் மூலமே எந்தவொரு ஆத்துமாவும் தேவனுக்காகப் பிரகாசிக்கமுடியும்.

gardengrow.jpg

முதலாவது தேவனுடைய அன்பு
இரண்டாவது கர்த்தருக்கு பயப்படும் பயம்
மூன்றாவது கர்த்தரை அறிகிற அறிவு

இம்மூன்றையும் ஒரு சுருக்கமான குறிப்பாகவே எடுத்து தியானிக்கிறோம்; ஒரு ஆத்துமாவைப் பண்படுத்த இன்னும் பல ஆ
தாரங்களையும் கர்த்தர் வைத்திருக்கிறார்; உதாரணத்துக்கு உபத்திரவங்கள் கூட ஒரு ஆத்துமாவானது பண்பட ஏதுவாகும்.

இந்த தியானம் தொடருகிறது...


ஜெபம்:
எங்களை நேசிக்கிற நல்ல பிதாவே, இந்த நல்ல மனமகிழ்ச்சியின் நாளுக்காக தம்மைத் துதிக்கிறோம்; இந்த நாளில் என்னையும் எங்களையும் தமது சமூகத்தின் மகிழ்ச்சியினால் நிறைப்பீராக; நாங்கள் உம்முடைய நல்ல தயவினால் பண்படுத்தப்பட்டு உமக்கு புகழ்ச்சியாக விளங்க உதவிசெய்யும்; இரட்சகரும் மீட்பருமான இயேசுகிறித்துவின் நாமத்தில் வேண்டுகிறோம், பிதாவே; ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

சமாதானத்தை ஒரு நதியைப்போல...

"கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்." (ஏசாயா.66:12)


இது இந்த வருடத்துக்கான ஒரு விசேஷித்த தியான வாக்கியம்; வேதத்தில் எங்கெல்லாம், "கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்", "கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று", என்றெல்லாம் வருகிறதோ அது சொல்லப்பட்ட குறிப்பிட்ட செய்தியின் அச்சாரமாகவும் அதன் நம்பகத்தன்மைக்கு ஆதாரமாகவும் இருக்கிறது;அதன்படி இங்கே வாசிக்கிறோம், ஆண்டவர், சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்.." என்கிறார்;

இதிலிருந்து முக்கிய குறிப்புகளை தியானிப்போமானால் நதியையை சமாதானத்துக்கும் ஜாதிகளின் மகிமையைப் புரண்டோடுகிற ஆற்றுக்கும் ஒப்பிடுகிறார்; நம்முடைய தேவன் நமக்குச் சொல்லவரும் எந்தவொரு செய்திக்கும் உதாரணமாக நம்மைச் சுற்றிலுமுள்ள தம்முடைய சிருஷ்டிகளையே குறிப்பிடுகிறார்;காரணம் அவை கர்த்தரால் சிருஷ்டிக்கப்பட்டவை;இரண்டாவது அதன்மூலம் நாம் காரியத்தை விளங்கிக்கொள்வது எளிது;இது தகப்பனுடைய அன்பு.

நதி, ஆறு ஆகிய இவ்விரண்டையும் குறித்த பொதுவான தன்மைகளை கவனிப்போமானால் நதி என்பதோ ஆறு என்பதோ தேசங்களையும் எல்லைகளையும் கடந்ததாகும்; பலரும் அதனை சொந்தங்கொண்டாடினாலும் அது குறிப்பிட்ட யாருக்கும் கட்டுப்பட்டதல்ல; அதாவது நதிகளும் ஆறுகளும் சமுத்திரமும் ஏரிகளும் இயல்பானவை; அவை வான் மழையால் உருவாகி தான் நியமிக்காத பாதையில் இயல்பாக ஓடி அது செல்லுமிடங்களையெல்லாம் செழிப்பாக்குகிறது; ஆம்,ஒரு நதியானது தான் செல்ல வேண்டிய பாதையை அது தீர்மானிக்கிறதில்லையே;அதுபோலவே ஒரு ஆவிக்குரிய மனுஷனும் அப்படியே இருக்கிறான்;ஆண்டவர் நிக்கொதேமு என்ற மனுஷனிடம் இதே கருத்தை காற்றை மையமாக வைத்துப் பேசினார்.

"காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். " (யோவான்.3:8)

அப்படியே ஆண்டவர் தரும் சமாதானமானது இயல்பானதாக இருக்கும்; அதன் விளைவாக வரக்கூடிய மகிமை என்பது தேசங்களையும் தேசங்களின் எல்லைகளையும் கடந்த செழிப்புள்ள- சுகவாழ்வு ஆகும்; இதனைக் கொடுக்கவே ஆண்டவர் நம்மீது பிரியமாக இருக்கிறார்.

Rivers+of+living+water.jpg

"ஹாப்பி நியூ இயர்" (Happy New year) என்று ஒருவரையொருவர் வாழ்த்திக்கொண்டிருக்கிறோம்; இன்னும் இரண்டொரு வாரத்துக்காகிலும் இது தொடருமல்லவா? ஆனாலும் நம்முடைய வாழ்க்கையில் எது மகிழ்ச்சி? ஒரு நல்ல விருந்துக்கு செல்கிறோம், அது ஒரு இரவு மட்டுமே நினைவில் நிற்கும்;நல்லதொரு ப்ராண்டட் ஷர்ட் ஒன்றைப் பரிசாகப் பெறுகிறோம்; அது அழுக்காகி துவைத்தபின்னரும்  அது புதிய சட்டை என்று சொல்லப்படுவதில்லை;ஆசையுடன் வாங்கிய ஒரு செல்போனோ அல்லது பரிசாகப் பெற்ற எந்தவொரு பொருளுமே நிறைந்த குறையாத மகிழ்ச்சியைக் கொடுக்கிறதில்லை; ஆனால் ஆண்டவர் தரும் சமாதானத்தின் பலனாகிய சந்தோஷம் ஒருபோதும் குறையாதது, நிறைவானது, மிகவும் அவசியமானது.

குறையாத நிறைந்திருக்கும் வேறு சிலவும் நம்மைச் சுற்றிலும் இருக்கலாம்; உதாரணத்துக்கு நம்முடைய வீட்டு வாசலில் பழைய வீட்டை இடித்த ரபீஷ் எனப்படும் உபயோகமில்லாத கட்டிட உடைப்புகள் போடப்பட்டிருக்கும்; அவை குறையாதது, நிறைவாக இருக்கும்; ஆனால் அதனால் பெரிய பலன் ஏதுவுமில்லை.

காட்டிலே மான்கள் கோடைக்காலத்தில் தண்ணீருக்காக நீண்ட தூரம் ஓடுமாம்; பலசமயம் கானல் நீரைத் தொடர்ந்து ஓடி ஏமாந்து சுருண்டு விழுந்து மாண்டு போகுமாம்; அதுபோலவே இந்த  மனிதன் உலகிலுள்ள எதற்காக ஓடுகிறானோ,அதுவே அவன் அழிவுக்கும் காரணமாகிறது; பணத்துக்காக ஓடிய ஒரு வாலிபன் நிறைவான பணத்தை சேகரித்த பின்னர் வாழ்க்கையின் அர்த்தங்களையும் அதன் மதிப்பு மிகுந்த மற்ற பகுதிகளையும் குறித்து யோசிக்கிறான்; ஆனால் அதற்குள் அந்த முக்கிய பகுதிகளை அடையும் வாய்ப்பு கிடைக்காமலே இருக்கும் சூழ்நிலைக்குள் போலியாக வாழப் பழகிக்கொள்கிறான்.

ஆனால் ஆண்டவர் மிகுந்த அன்புடன் சொல்வது என்னவென்றால் சமாதானத்தை ஒரு நதியைப் போல பாயும்படி செய்கிறேன்;ஆம்,அவர் செய்கிறவர்; யாருக்கு? அவரை நோக்கி அவருடைய செயலுக்காகக் காத்திருப்போருக்கு; இருக்கும் ஒன்றை எடுத்துத் தருவது இலேசான காரியம்; ஆனால் இல்லாத ஒன்றை செய்து தான் தரவேண்டும்; ஆண்டவர் செய்து தர ஆயத்தமாக இருக்கிறார்; ஏனெனில் நேற்றைய சமாதானம் இன்றைக்கு உதவாது; நம்முடைய சூழ்நிலையைப் பொறுத்து நம்முடைய மனம் அமைதியடையக்கூடிய வேகமும் மாறுபடுகிறது.

இந்த காரியத்தில் பால் கொடுக்கிற தாயானவள் தன் பாலகனை சாந்தப்படுத்தி இளைப்பாறப்பண்ணுவது போன்ற கரிசனையுடன் ஆண்டவர் நம்மீது வாஞ்சையாக இருக்கிறாராம்;அவருடைய அன்பைப் புரிந்துகொண்டு அவரிடம் தங்கியிருப்போம்; அவரே அனைத்தும் செய்துமுடிப்பார்.

ஜெபம்:
எங்களை அதிகமாக நேசிக்கிற நல்ல தகப்பனே, எங்கள் வாழ்வில் பல்வேறு சூழ்நிலைகளில் சமாதானத்துக்காக ஏங்குகிறோம்; எங்களிடமும் பலர் சமாதானமடைய ஆவலோடு காத்திருக்கிறார்கள்; நதியைப் போன்று புர‌ண்டு வரும் உமது சமாதானத்துக்காக நாங்கள் காத்திருக்கிறோம்; கர்த்தர் எங்களுக்கு வாக்குபண்ணிய வண்ணமாக ஒருவரும் கொடுக்கவும் கெடுக்கவும் எடுக்கவுங்கூடாத ஒரு சமாதானத்தை எங்கள் உள்ளத்திலிருந்து வற்றாத நதியைப் போலப் பாயப்பண்ணும்படியாக எம்மைத் தாழ்த்தி விண்ணப்பிக்கிறோம்; இரட்சகரும் மீட்பருமான இயேசுகிறித்துவின் நாமத்தில் பிதாவே,ஆமென்.

கரையோர மரங்கள் ஏராளமாய்
கனிதரவேண்டும் தாராளமாய்
இலைகள் எல்லாம் மருந்தாகணும்
கனிகளெல்லாம் உணவாகும்,வாருமையா போதகரே..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

சர்ப்பங்களைப்போல...

"ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்."(மத்தேயு.10:16)

ஆடு, ஓநாய், சர்ப்பம், புறா இந்த நான்கு ஜீவன்களுமே நம்மைச் சுற்றிலும் வாழ்பவையே;இவைகள் நாட்டிலும் இருக்கிறது,காட்டிலும் இருக்கிறது;இதன் வழியே சத்தியத்தைக் கற்போம்;

இன்று முதலாவது
சர்ப்பங்களைப்போல...

இது நம்முடைய ஆண்டவர் நமக்குக் கொடுத்துள்ள எளிமையான ஆலோசனையாகும்;இதன் அடிப்படையிலேயே நாம் செயல்பட்டு வருகிறோம்;ஆனாலும் பலமுறை பேதையான புறாக்களைப் போல ஏமாற்றப்பட்டதும் உண்டு;சிலரை தவறாகக் கணித்து நமது வீடுகளுக்கு வரவழைத்து அதனால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய முடியாமலும் போய்விடுகிறது;யாரையும் நம்பாத சர்ப்பத்தின் தன்மையால் சில நல்ல உறவுகளை இழந்த அனுபவங்களும் நமது இருதயத்தை வாதித்துக் கொண்டிருக்கிறது.

dove1.jpg

"எப்பிராயீம் பேதையான புறாவைப்போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை; எகிப்தியனைக் கூப்பிடுகிறார்கள்...:(ஓசியா.7:11)

"தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது."(ஆதியாகமம்.3:1)

ஆண்டவர் நம்மைப் புறாக்களைப் போல கபடற்றவர்களாக இருக்கச் சொன்னாலும் மேற்கண்ட இரு வசனங்களில் புறாக்களிடமுள்ள பொதுவான பெலவீனத்தையும் சர்ப்பத்திடம் இருக்கக்கூடிய தீயகுணத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்;புறாக்களின் கபடற்ற தன்மையானது எல்லை மீறும்போது அது பேதைத்தன்மையைக் கொண்டுவருகிறது.

"விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்." (நீதிமொழிகள்.22:3)


அதுபோலவே சர்ப்பத்தைப் போல எச்சரிக்கையாக இருக்கும் தன்மையானது எல்லைமீறினால் அதுவே அதன் தந்திரகுணமாகிய எதையும் எதிர்க்கும் அல்லது வஞ்சிக்கும் தன்மையை நோக்கி நடத்திவிடும்.

"சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்? (மத்தேயு.23:33)

8146-northern_watersnake-nerodia_sipedon_sipedon.jpg

மேற்கண்ட வசனத்தில் ஆண்டவர் பரிசேயரைப் பார்த்து சர்ப்பங்களே என்று சாடுகிறார்;அப்படியானால் பாராட்டுகிறாரா, பழிக்கிறாரா..?

தமது சீடர்களிடம் சர்ப்பங்களைப் போல எச்சரிக்கையாக இருங்கள் என்றவர் மிகமிக எச்சரிக்கையாக இருந்து ஆண்டவரையே எதிர்த்த பரிசேயரைப் பாராட்ட வேண்டுமல்லவா?

ஆண்டவர் தம்முடைய சீடர்களிடம் சொல்லவருவது என்னவாக இருக்கவேண்டும் என்று ஆராய்ந்தோமானால் அவர் தம்மை எங்கு சென்றாலும் எதிர்த்து கேள்வி எழுப்பும் பரிசேயரை பாராட்டாமல் பாராட்டுகிறார்; அதாவது பரிசேயர் சத்தியத்துக்குக் குருடராக இருந்து தீமைக்கு ஞானிகளாக இருந்தனர்; இதைக் குறித்து அறிந்திருந்த ஆண்டவர் தம்முடைய சீடர்களும் இந்த காரியத்தில் கவனமாக இருந்து பரிசேயருடன் கலந்துவிடாமலும் சர்ப்பங்களைப் போல செயல்படும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுகிறார்;அதற்கு ஆதாரமாக மற்றொரு வசனம்...

"அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்."(லூக்கா.12:1)

பரிசேயர் = சர்ப்பங்கள்
சர்ப்பங்கள் = எச்சரிக்கை = வினா அல்லது கேள்வி

இதன்படி சர்ப்பங்களைப் போல அதாவது பரிசேயரைப் போல நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள்;ஆனாலும் அவர்களுடைய புளித்தமாவைப் போன்ற பழைய போதகங்களை நீங்களும் ஏற்றுக்கொண்டு அதற்கு சுவிசேடகர்களாகி விடவேண்டாம் என்கிறார்;ஆனால் நம்முடைய தலைவர்களில் பலரும் அந்த புளித்தமாவைப் பிசைந்து சமைப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறார்களே.?

அதில் ஒன்று , ஒன்றான மெய்த் தெய்வமாகிய ஆதிதேவன் நியமித்த இரட்சகரை ஏற்றுக்கொள்ளாமல் அவரை தூதன் நிலைமைக்கு தாழ்த்திவிட்டு அல்லது ஒரு சீனியர் போல மரியாதை செலுத்துவதுடன் நிறுத்திக்கொண்டு நேரடியாக பிதாவைத் தேடிச் செல்கின்றனர்;யாவே எனும் அவருடைய நாமத்தைச் சொல்லவோ அதைச் சொல்லிப் பாடவோ இயேசு என்கிற இரட்சகருடைய நாமம் இல்லாவிட்டால் இங்கு யாருக்கும் எந்த தகுதியும் இல்லை;இவர் (
இயேசு ) வழியாக ஏறிப்பிடித்து அங்கே சென்று ஆராதிக்கச் சென்றாலும் அவர் இவரிடமே நம்மை நடத்துவார்;ஏனெனில்...

"கர்த்தாவே, தேவரீர்,
(இயேசு ) மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே (இயேசு ) சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள். (வெளிப்படுத்தல்.4:11)

" அந்தப் புஸ்தகத்தை அவர்
(இயேசு ) வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு (இயேசு ) முன்பாக வணக்கமாய் விழுந்து:தேவரீர் (இயேசு ) புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் (இயேசு ) அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் (இயேசு ) வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். (வெளிப்படுத்தல்.5:8-12 )

ஜெபம்: எங்களை நேசிக்கிற பரலோகப் பிதாவே உம்முடைய குமாரனாகிய இயேசுகிறித்துவை எமக்கு ஆண்டவராகவும் மேய்ப்பராகவும் கொடுத்ததற்காக தமக்கு ஸ்தோத்திரம்;எங்களைச் சுற்றிலும் இருக்கக்கூடிய பல்வேறு பரிசேயரின் புளித்தமாவைப் போன்ற பல்வேறு கள்ள உபதேசங்களுக்கு நாங்கள் எச்சரிக்கையாக இருக்க தம்முடைய நல்ல ஆவியானவர் எம்மை செம்மையான வழியில் நடத்த அருள்புரிவீராக; இரட்சகரும் மீட்பருமான இயேசுகிறித்துவின் நாமத்தில் பிதாவே,ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

கனத்துக்குரிய பாத்திரம்

"ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப் பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்."(2.தீமோத்தேயு.2:20,21)


Largest silver vessel in the world

Largest silver vessel in the world

எனது பள்ளிக்காலத்தில் ஒவ்வொரு வகுப்பு மாறும் போதும் எனது ஆசிரியர்களால் மிகவும் விரும்பப்பட்ட - அதிகம் கவனிக்கப்பட்ட‌ மாணவனாக இருந்தேன்; இதனால் ஆசிரியர் எந்தவொரு வேலைக்கும் என்னையே முதலாவது அழைப்பார்கள்; இதில் எனக்கு ஒரு பெருமை, மற்ற மாணவர்களுக்கு என்மீது பொறாமை.

அதுபோலவே என் தாய்க்கும் நான் பிரியமான பிள்ளையாக இருந்தேன்;எந்த வேலை கொடுத்தாலும் நானே பொறுப்புடனும் நேர்த்தியாகவும் செய்வேன் என்ற நம்பிக்கை எனது தாயாருக்கு என்மீது இருந்தது.

எனக்கும் கூட தனிப்பட்ட முறையில் சில விருப்பங்கள் இருந்தது; உதாரணமாக நான் விதவிதமான பேனாக்களை சேகரித்து வைத்திருக்கிறேன்; ஒரு பேனாவைக்கூட இதுவரை தூக்கியெறிந்ததில்லை; மேலும் ரோட்டில் கிடக்கும் பேனாக்களைக் கூட எந்தவித சிரமமோ வெட்கமோ பாராது எடுத்துவந்து விடுவேன்;இப்படி எத்தனை பேனாக்கள் என்னிடமிருந்தாலும் அதிலும் கூட எனக்குப் பிரியமான சில பேனாக்கள் உண்டு;அ
வை காணாமற் போனால் மிகவும் வருத்தமாக இருக்கும்; குறிப்பிட்ட சில பேனாக்களிலேயே எனக்கு நன்றாக கையெழுத்து வரும்.

எதற்கு இதையெல்லாம் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று யோசிக்கிறீர்களா? ஆம், இன்றைய தியானத்துக்காக நான் தேர்ந்தெடுத்த வேதவசனமும் கூட இதையே சொல்லுகிறது; "நீ ஒரு கனத்துக்குரிய பாத்திரமாக இருக்கவேண்டும் ".

நமது வீடுகளில் சமையலறையில் கவனித்தால் சில பாத்திரங்கள் அலமாரியிலும் சிலது பரணிலும் இருக்கும்;அவற்றில் பெரும்பாலானவை எப்போதாவது ஒரு முறை பண்டிகைக் காலங்களிலோ அல்லது விருந்தினர் வந்தாலோ மட்டுமே எடுத்து பயன்படுத்தப்படும்;ஆனால் சில பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டு மீண்டும் பயன்படுத்துவதற்காக சுத்திகரிக்குமிடத்தில் இருக்கும்;அவை அந்த வீட்டின் சமையலறையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் முக்கிய பாத்திரங்களாக இருக்கும்.

அதுபோலவே எஜமானனாகிய பரலோகப் பிதாவுக்கு முன்பாக நாம் கனத்துக்குரிய பாத்திரமாகத் திகழ வேண்டுமானால் நாம் எப்படிப்பட்ட பாத்திரமாக இருக்கவேண்டுமென பவுல் இங்கே தீமோத்தேயுவுக்கு எழுதின நிருபத்தின் மூலம் அறிய முடிகிறது; அது யாதெனில் முதலாவதாக நாம் பரிசுத்தமாக்கப்பட்ட பாத்திரமாக இருக்கவேண்டுமாம்;அடுத்து எஜமானால் அடிக்கடி பயன்படுத்தப்படும் உபயோகமான பாத்திரமாக இருக்கவேண்டுமாம்; மேலும் எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்ட பாத்திரமாக இருக்கவேண்டுமாம்; இவையெல்லாம் இணைந்தால் கனத்துக்குரிய பாத்திரம் என்ற பெயர் நிலைக்கும்.

கனம்
அல்லது மரியாதை பாத்திரத்தின் தரத்தில் இல்லை,அது பயன்படும் விதத்தில் தான் இருக்கிறது;ஒருவேளை நீ பொன்னாலான பாத்திரமாக இருந்து மினுக்கான வேலைப்பாடுகளுடன் அரச மாளிகையின் காட்சிப் பொருளாகவும் இருக்கலாம், அல்லது அரசனால் விரும்பிப் பருகப்படும் பானபாத்திரமாகவும் இருக்கலாம்.

எனவே நான் மண்ணான பாத்திரம் என்ற தாழ்வு மனப்பான்மையும் நமக்கு வேண்டாம் அல்லது நான் பொன்னான பாத்திரம் என்ற பெருமையும் நமக்கு வேண்டாம்;நம்மில் யாருமே பிழைப்புக்காக அழைக்கப்படவில்லை; மாறாக நம்மை அழைத்தவராலே பிழைத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோமாக.

ஜெபம்:
எங்களை அதிகமாக நேசிக்கிற பரலோகப் பிதாவே ஆசீர்வதிக்கப்பட்டதான இந்த நல்ல நாளுக்காக தம்மை ஸ்தோத்தரிக்கிறோம்; இந்த நாளின் தியானத்தின்படி நாங்கள் உமக்கு உகந்த பாத்திரமாக விளங்க எங்களை சுத்திகரியும்; நாங்கள் எங்களையே மேன்மைபடுத்தாமல் உமக்கு உபயோகமான பாத்திரங்களாக விளங்கிடவும் துலங்கிடவும் இலங்கிடவும் உதவி செய்வீராக; இரட்சகரும் மீட்பருமான இயேசுகிறித்துவின் நாமத்தில் ஜெபங்கேளும் பிதாவே, ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

ஒரு வார்த்தை மாத்திரம்...

எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது; ஆனால் கீழ்க்கண்ட வசனமானது ஆங்கிலத்தில் எனது காதுகளில் தொனித்துக்கொண்டே இருந்தது; நண்பர்கள் என்னை கேலி செய்யாவிட்டால் சொல்லுகிறேன், ஊழியத்துக்காக வெளியே சென்றுவந்து சோர்வுடன் மாலை சுமார் 4 மணிக்குப் படுத்தேன்; உறக்கத்திலும் எழுந்தபிறகும் தொடர்ந்து இந்த வசனமானது எனக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது.


(KJV)  But he answered and said, It is written, Man shall not live by bread alone, but by every word that proceedeth out of the mouth of God.
(Matthew. 4:4)

அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.(மத்தேயு.4:4 )

IMG_0527.JPG

அதனைத் தொடர்ந்து நாளைய தினத்துக்கு என்ன எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது கீழ்க்கண்ட வேதப் பகுதியானது எனது  மனதில் வந்துபோனது; நாம் தியானிக்கப்போவது ஒரு வசனமாக இருப்பினும் விதிவிலக்காகவும் புரிதலுக்காவும் கீழ்க்கண்ட வேதப் பகுதியை வாசித்துக்கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.

"இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து:ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.

அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.

நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்.

இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான். (மத்தேயு.8:5 முதல் 13 வரை)

மேற்கண்ட வேதப்பகுதியில் பல விசேஷித்த அம்சங்கள் உண்டு; நாம் தியானிக்க ஏற்ற சரியான மைய வாக்கியமானது,"ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்," என்பதே; கர்த்தருடைய வார்த்தை எத்தனை வல்லமையானது, எத்தனை மேன்மையானது என்பதை மட்டுமே நமது வாழ்நாள் முழுமையும் தியானித்தாலும் நமது ஆயுட்காலம் போதாது; ஆனால் இங்கே அந்த நூற்றுக்கு அதிபதியானவன் ஆண்டவரைக் குறித்து சிலாகித்துப் புகழவும் ஆண்டவர் அவனைப் பாராட்டவும் காரணமாக இருந்த கூற்று இன்னும் விசேஷமானது; அது தற்கால வேத வல்லுனர்களுக்கெல்லாம் கண்களைத் தெளிவிக்கும் அறிக்கையாகும்; அது பின்வருமாறு, "நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்."

ஆண்டவரால் பாராட்டப்பட்ட மிகச் சிலரில் இந்த நூற்றுக்கதிபதியும் ஒருவனாகக் காரணமாக இருந்தது மேற்காணும் அறிக்கையே;இதில் "நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும்..." என்ற கூற்றானது மாம்சத்தில் வந்த இயேசுவானவரின் தெய்வத்தன்மைக்கு மிகச் சிறந்த நேரடியான உதாரணமாகும்; எனவேதான் ஆண்டவர் அவனைப் பாராட்டுகிறார்; இயேசுவானவரின் தெய்வத்தன்மையைக் குறித்து ஐயம் கொள்வோரின் மனக் கண்களைப் பிரகாசமாக்கும் இந்த கூற்றின்படி,"மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்பதற்கும் புதிய வெளிப்பாடுகள் கிடைக்கிறது.

"தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தை" மற்றும் "நீர் ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்" என்ற நூற்றுக்கு அதிபதியின் கூற்று ஆகிய இவ்விரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்; மேலும் "அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்.."(மத்தேயு.5:2) எனும் வசனத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்; இத்துடன்,"கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று."(ஏசாயா.58:14) என்பதையும் ஒப்பிடவும்.

"தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்..." இந்த வார்த்தையை ஆண்டவர் கம்பீரமாக சாத்தானுக்கு எதிராகச் சொல்லும்போது அவன் நடுநடுங்கிப்போனான்; அந்த பராக்கிரம் மிகுந்த தேவனுடைய வார்த்தையானவரே அவர் தானே, அந்த உரிமையுடன் இயேசுவானவர் கர்த்தருடைய வார்த்தையை எடுத்துச் சொன்னபோது அது சாத்தானுக்கு எதிரான கல்லாகவும் அதை வாசித்த எனக்கு அப்பமாகவும் மாறினது; ஆம்,கல்லுகளால் ஆபிரகாமுக்குப்  பிள்ளைகளை உண்டாக்கக்கூடிய தேவனால் அந்த கல்லுகளை அப்பங்களாக்கவும் முடியுமே; பசியுடன் கேட்கும் ஆத்துமாவுக்கு அது அப்பமாகவும் சோதிக்க கேட்கும் சாத்தானுக்கு எதிரான கல்லாகவும் மாறும்; இதனால் சாத்தானின் கிண்டலான கேள்விக்கும் பதில் கொடுக்கப்பட்டது; அவன் சொன்னான், "நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் " என்பதாக‌. சிருஷ்டி கர்த்தாவான ஆண்டவரோ கர்த்தருடைய வார்த்தையை அப்பமாகவும் சாத்தானுக்கு எதிரான கல்லாகவும் மாற்றி விந்தை புரிந்தார்;கல்லை எடுப்பது போல‌ குனிந்தாலே ஓடும் நாயைப் போல சாத்தான் ஓடியே போனான்.

christcrucified.jpg

"இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்."(கொரிந்தியர்.2:2)

அடுத்து நூற்றுக்கதிபதியின் கூற்றை கவனிப்போமானால், அவனுடைய வேலைக்காரன் சுகமாக ஆண்டவர் நேரடியாக அங்கே செல்ல வேண்டியதில்லை; வார்த்தையே போதுமானது; ஏனெனில் ஆதியிலிருந்து உரைக்கப்பட்ட வார்த்தையினாலேயே அனைத்தும் சிருஷ்டிக்கப்பட்டது, சிருஷ்டிகள் போஷிக்கப்பட்டது, காப்பாற்றப்பட்டது, சொஸ்தமாக்கப்பட்டது; அந்த வார்த்தையின் வடிவானவர் இதோ எதிரே நிற்கிறார்; இப்போதும் அவர் சொல்லும் வார்த்தையே எங்கோ தூரத்திலிருக்கும் பிணியாளியை சுகமாக்கப் போதுமானது; காரணம் அவர் காணக்கூடாதிருந்த சர்வவல்ல தேவனே; அவர் மாம்சத்தில் தம்மை வெளிப்படுத்தின தேவன், எனவே அவர் சொல்லும் வார்த்தையானது இன்னும் விசேஷமானது.

இறுதியாக, இதே வார்த்தைகளை அதே அதிகாரத்துடன் பேசும் நாமும் ஆண்டவருக்கு சமமாக முடியுமா? அதில் தான் நூற்றுக்கதிபதியின் கூற்று சிறப்பிடம் பெறுகிறது; அவன் சொன்னது, "நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும்..." இதன்படி மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாகிய இயேசுவானவர் தாம் மாம்சத்திலிருந்த நாட்களில் தம்முடைய அதிகாரத்தின் எல்லைகளை வரையறுத்துக் கொண்டவராக செயல்பட்டது நாம் அறிந்ததே; ஆனால் அந்த எல்லைகளைக் கடந்து வெளியே வந்து அற்புதம் செய்ய நூற்றுக்கதிபதி ஆண்டவரைத் தூண்டுகிறான்; மாம்சத்தில் வந்த இயேசுவானவர் பரலோகத்திலிருக்கிற தம்முடைய பிதாவுக்குக் கீழ்ப்பட்டவராக இருந்தாலும் இந்த பூமியில் இருக்கும்போது இம்மானுவேலராக அதாவது உடனுறை சர்வ வல்ல தேவனாக இருக்கிறபடியினால் அவர் சொல்லும் வார்த்தையும் பிதாவின் வார்த்தைக்கு சமமானது, ஏனெனில் அவர் பிதாவுக்கு சமமானவர், ஆயினும் தன்னைக் குறுக்கிக்கொண்டு மனிதனாக உலாவந்தார் என்பதே நூற்றுக்கதிபதியின் கூற்றாகும்; இதையே ஆண்டவர் மனதாரப் பாராட்டுகிறார்; இதன்படி ஆண்டவருடைய வார்த்தையை நாமும் அவர் நமக்கு கொடுத்த அதிகாரத்தின் எல்லையிலிருந்து பேசும்போது நமக்கும் காரியம் வாய்க்கும்;ஆனாலும் அதன் மகிமை முழுவதும் அவருக்கே சேரும்;அதாவது நூற்றுக்கதிபதியின் பார்வையில் அவனுக்கு கீழே பணிபுரிந்த நூறு பேரில் ஒருவனைப் போல நாம் இருக்கிறோம்;நம்முடைய அதிகார எல்லைகளை அறிந்து செயல்படுவது நம்மை விண்ணக அரசின் பணியில் நிலைத்திருக்கச் செய்யும் என்று அறிவோமாக‌.

ஜெபம்:

எங்களை அதிகமாக நேசிக்கிற பரலோகப் பிதாவே, தம்முடைய குமாரனாகிய இயேசுகிறித்துவின் நாமத்தில் அடியாருக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்காக உம்மைத் துதிக்கிறோம்;இருளின் அதிகாரத்திலிருக்கும் இந்த உலகில் வாழும் நாங்கள் தமது அன்பின் குமாரனுடைய இராஜ்யத்துக்குரியவர்களாக எம்மைக் காத்துக்கொள்ள உதவிசெய்யும்;எங்கள் அன்றாட செயல்பாடுகள் ஒவ்வொன்றின் மூலமாக விண்ணகம் மகிழ்வதாக;இரட்சகரும் இராஜாவுமான இயேசுகிறித்துவின் நாமத்தில் ஜெபங்கேளும் பிதாவே,ஆமென்.

{இந்த பதிவு சற்று(?) நீண்டுவிட்டது;பொறுத்துக்கொள்ளவும்.}


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இந்த திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு வசனத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு தியானிக்கப் போகிறோம்;நண்பர்கள் அது சம்பந்தமான எந்த விவாதத்தையும் எழுப்பாமல் தங்கள் ஐயங்களை கேள்விகளாகவும் தங்கள் பாராட்டுகளை சாட்சியாகவும் தெரிவிக்க வேண்டுகிறோம்;ஆர்வமுள்ள ஒவ்வொரு தள நண்பரும் இதில் பங்காற்ற அன்புடன் அழைக்கிறோம்;நமக்குள் இணக்கமானதும் இசைவானதுமான சூழலை இந்த பகுதியானது உருவாக்க கர்த்தர் தாமே உதவிசெய்வாராக‌.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard