இன்று காலையில் இமயம் டிவியில் The Father’s House எனும் நிகழ்ச்சியில் நான் கவனித்தது:
அதில் ஆண்டவருடைய அளவற்ற கிருபையைக் குறித்து இருவர் உரையாடுகின்றனர், இருவரில் ஒருவர் சொல்லுகிறார், நான் செய்த பாவங்களையெல்லாம் எந்தவிதமான நிபந்தனையுமின்றி ஆண்டவர் தம்முடைய பெரிதான கிருபையால் மன்னித்துவிட்டார்;ஆனால் செய்யப்போகும் பாவங்களைக் குறித்து என்ன, என்று ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கேள்வியைக் கேட்டவர் நல்லதொரு பதிலை சொல்லுவார் என்று ஆவலுடன் இருந்த போது சற்றும் சம்பந்தமில்லாமல் எபிரெயர்.9:27-ஐ சொல்லி முடித்துவிட்டார்.
செழிப்பு உபதேசம், விசுவாச உபதேசம், வார்த்தையின் வல்லமை உபதேசம் போன்ற பலவித நவீன உபதேசங்களில் இதுவும் ஒன்று;இது தேவனுடைய அளவற்ற கிருபையின் உபதேசம், இதுவும் ஆபத்தானதே..! எப்படியெனில் கிறிஸ்துவின் சரீரமாக பாவிக்கப்படும் சபையின் சீரான தேக வளர்ச்சிக்கு உதவியாக ஒன்றையொன்று விஞ்சாத சமநிலையான போதகமே இன்றைய உடனடி தேவையாகும், அதுவே வேதத்தின் மையக்கருத்தாகும்.
எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். (I கொரிந்தியர் 12:12)
அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது. (எபேசியர் 4:16 )
மேற்கண்ட வசனத்தின்படி ஓயாமல் கண்ணைக் குறித்தே பேசுவதோ அல்லது காலைக் குறித்தே பேசுவதோ அல்ல, ஆரோக்கிய உபதேசம்;அவ்வாறே சரீரத்தில் ஒரு உறுப்பு மட்டும் அதிக வளர்ச்சியடைந்து மற்றது சிறுத்துபோயிருந்தால் அதனை ஊனம் என்கிறோம்;அப்படியே உபதேசத்திலும் சமநிலை இருந்தாகவேண்டும்.
கிருபையைக் குறித்து பேசுவோரும் சரி விசுவாசத்தைக் குறித்து பேசுவோரும் சரி வார்த்தையின் வல்லமையைக் குறித்து பேசுவோரும் சரி இன்னும் செழிப்பைக் குறித்து பேசுவோரும் சரி கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்னவெனில் அதன் மறுபக்கத்தையும் சொல்லியாக வேண்டும்;அது நாணயத்தின் இருபக்கத்தைப் போன்றது;நாணயத்தின் ஒருபக்கத்தில் அதிகார முத்திரையும் அதன் மறுபக்கத்தில் அதன் மதிப்பும் காணப்படுவது போல கிருபையும் அதன் மேன்மையும் சொல்லப்படும்போதே அதனை இழப்பதால் வரும் துன்பத்தையும் சொல்லிவிடுதல் வேண்டும்.
"நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்.." (ஆதியாகமம்.4:7)
சிருஷ்டி கர்த்தாவாகிய சர்வ வல்லவர் உரைத்த இந்த வாசகத்தை இந்த உலகின் முதல் சுவிசேஷ வாக்கியம் என்பேன்.
"பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்."(1.யோவான்.3:8,9)
என்பதே பூரண சுவிசேஷமாகும்;எப்படியெனில் நம்முடைய ஆண்டவர் சொல்லுகிறார்,
"அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,
நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
" (யோவான்.16:8 முதல் 11 வரை)
தேவனுடைய அளவற்ற கிருபைக் குறித்தும் எப்படிப்பட்ட பாவத்தையும் மன்னிக்கிற அவருடைய தன்மையைக் குறித்தும் சொல்லும்போது ஏற்பட்ட தைரியம் அசட்டு தைரியமாகி விடாதிருக்க பாவத்தின் விளைவையும் மீறுதலின் பயங்கரத்தையும் அவசியம் போதகர் சொல்லியிருக்க வேண்டும்;ஆனால் அது அத்தனை சுவாரசியமாக இருக்காது என்பதால் அதனை இந்த நவீன போதகர்கள் தவிர்த்து தேனொழுக பேசுகிறார்கள்.கிருபையினால் பாவத்தை மன்னிக்கிறார் என்பதற்கு எப்போது வேண்டுமானாலும் மன்னிப்பார் என்பது அர்த்தமல்ல;மீட்கப்பட்ட ஒருவனை பாவ சோதனை தொடரும்,ஆனால் கிருபையைச் சார்ந்து நிற்பவன் பாவ சோதனையை மேற்கொள்ளுவான்;பாவத்தை மறுப்பதே கிருபையை இயக்கும் சாவியாகும்.பாவத்தை மறுக்கும் திராணியானது தேவன் மீதான அன்பினால் உண்டாகிறது.
பலர் நினைப்பது போல கிருபை என்பது நிபந்தனையற்றதல்ல;அதனை வீணடிக்கவும் கூடாது. எனவே வேதம் கிருபையை சத்தியத்தோடும் சமாதானத்தை நீதியோடும் இணைத்து வைத்திருக்கிறது;சத்தியமில்லாத கிருபையும் நீதியில்லாத சமாதானமும் பயனற்ற உபதேசமாகும். அதுபோலவே செழிப்பைக் குறித்து உபதேசிப்போர் செழிப்பின் நோக்கத்தை சொல்லியாகவேண்டும்; செழிப்பின் நோக்கம் அவரவர் செழித்திருப்பது அல்ல, தரித்திரரின் மீது கரிசனை கொள்வதே செழிப்பின் நோக்கமாக இருக்கும்; மேலும் குறைவுகளிலும் உபத்திரவங்களிலும் தடுமாறாமலிருக்கவும் ஜனங்கள் உபதேசிக்கப்படவேண்டும்;இவ்வாறே வார்த்தையின் வல்லமை மற்றும் விசுவாசம் சம்பந்தமான போதனைகளிலும் சமநிலை காணப்படாவிட்டால் அது முழுமையான உபதேசமாக இல்லாமற் போவதுடன் கள்ள உபதேசமாகவும் மாறிவிடும் ஆபத்து உண்டு.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)