மன அழுத்தம் என்பது இன்றைக்கு வயது வித்தியாசமில்லாமல் மனிதர் மிருகம் வித்தியாசமில்லாமல் பாதிக்கும் ஒரு மனநோயாக உருவெடுத்துள்ளது;இந்த பிரச்சினையானது மனுக்குலம் தோன்றிய நாளிலிருந்தே இருந்ததா என்பது அறியப்படாவிட்டாலும் இன்றைய நவீன உலகில் இதன் பாதிப்புகள் அறியப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது; ஆனாலும் நிரந்தர விடுதலை பெற்றோரின் எண்ணிக்கையைக் குறித்து நம்பிக்கை தரும் தகவல்கள் இல்லை;இதன் காரணமாகவே இறைதேடலும் தியான பயிற்சிகளும் மனவள ஆலோசனை பட்டறைகளும் அதிகரித்து அதுவும் ஒருவித வியாபாரமாகிவிட்டது, இது உலகம்.
ஆனால் இயேசுநாதரை வணங்குகிறோம் என்பவர்களின் நிலைமை என்ன, அவர்களும் உலகத்தில் இருப்பதால் சற்றேறக் குறைய அதேவிதமான பாதிப்புகள் கிறிஸ்துவின் அடியவர்களிடத்தும் காணப்படுகிறது;இதற்கு தலைவர்களும் தலைவர்களின் குடும்பத்தாருங் கூட விதிவிலக்கல்ல; இதுபோன்ற சூழ்நிலையில் தவிக்கும் பல குடும்பங்களுடன் தொடர்பில் உள்ள என்னுடைய தனிப்பட்ட வாழ்விலும் பலமுறை இதுபோன்ற நிலைமை ஏற்பட்டதுண்டு;பிரச்சினை எல்லோருக்கும் பொதுவானதே,ஆனால் அதனை எதிர்கொள்ளும் முறையிலேயே விளைவுகள் உண்டாகிறது.
இதோ அண்மையில் நான் சந்தித்த ஒரு மிகப் பெரிய சோதனையையும் அதில் ஆண்டவர் என்னை நடத்திய விதத்தையும் கர்த்தருக்கு மகிமையாகப் பகிர்ந்துகொள்ளுகிறேன்.
நான் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் எந்த முகாந்தரமும் இல்லாமல் என்னை பகைத்து வீட்டை காலிசெய்ய கெடு வைத்துவிட்டார்;என்னுடைய மகள் +2 பரீட்சை எழுதவேண்டியிருப்பதைக் காரணம் காட்டி ஒரு வருடம் அவகாசம் கேட்டேன்; ரொம்பவும் யோசித்துவிட்டு வாடகையை கூட்டித்தர வேண்டுமென்றார்; அதற்கும் ஒப்புக்கொண்டேன்;ஒரு வருடம் முடிவதற்குள் 12 வது வாடகையே உயர்த்தி தரவேண்டும் என்றார்;அதையும் ஒப்புக்கொண்டேன்; இந்த வகையில் எனக்கு எதிர்பாராமல் 750 ரூபாய் நஷ்டம்; மேலும் மின்வாரியத்துக்கு வீட்டு உரிமையாளர் கட்டவேண்டிய 1100 ரூபாய் டெபாஸிட் பணத்தையும் நானே கட்டவேண்டும் என்றார்; அதையும் கட்டிவிட்டேன்; வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர் வரக்கூடாது என்றார்; அதையும் ஒப்புக்கொண்டேன்;வீட்டில் நாய் வைக்கக்கூடாது என்றார், சரி அனுப்பிவிடுகிறேன் என்று அதற்கும் ஒப்புக்கொண்டேன்; நாய்களை நான் விரும்பி வாங்கி வளர்க்கவில்லை,அவற்றை பராமரிக்க முடியாதவர்களிடமிருந்து இலவசமாக இரண்டு வளர்ந்த நாய்கள் வந்தது;லேப் இனம் ஒன்றும் ஜெர்மன் ஷெப்பர்டு இனம் ஒன்றுமாக இரண்டும் கம்பீரமாக வாசலில் இருக்கும்;அவற்றுக்கு நாங்கள் தயிர் சாதம் போட்டு தான் வளர்க்கிறோம்;ஆனால் அவை விசுவாசமாக இருக்கும்;இது தனிவீடு என்பதால் நான் வெளியே சென்று தாமதமாக வந்தாலும் வீட்டுக்கு பாதுகாப்பாக இருக்கும்; பிரச்சினையென்னவென்றால் வீட்டு உரிமையாளருடைய மனைவிக்கு நாய் அலர்ஜி;கடித்துவிடுமோ என்று பயம்; ஆனால் வாராவாரம் வந்து எங்களை வேவு பார்த்துவிட்டு சாமிக்கு பூ பறித்து செல்லுவார்கள்;இதற்கு தடையாக நாய்கள் கேட்டுக்குக் குறுக்கே வந்து நிற்பதே பிரச்சினை;இன்னும் ஆதரவில்லாத நிலையில் தவித்த எனது மனைவியின் சகோதரி மகளுக்கு பிரசவம் பார்த்தோம்; அதை வீட்டு உரிமையாளரிடம் சொல்லாமலே செய்துவிட்டோமாம்; இப்படி ஒரு அடிமை போல அங்கே அனைத்தையும் சகித்துக்கொண்டு இருந்தோம்; அதிகமில்லை, இங்கே குடியேறி ஆறு மாதத்திலிருந்தே இவ்வளவு நெருக்கங்கள்..!
இந்நிலையில் கடந்த ஜூலை மாத வாடகையைக் கொடுக்கும்போது அக்ரிமென்ட் புதுப்பிக்கவில்லையே என்று கேட்டேன்;ஏனெனில் அதனை புதுப்பிக்க என்று கூறி மே மாதமே வாங்கிவிட்டார்;எனவே நான் கொடுத்துள்ள அட்வான்ஸ் (Rs.50,000/-) பணத்துக்கான உத்தரவாதம் கேள்விக்குரியாகியது;ஆனால் அக்ரிமென்ட் கேட்டதும் கோபமாகி நீங்கதான் ஜனவரியிலேயே வீட்டை காலிபண்ணித் தருவதாகச் சொன்னீர்களே, என்றார்; நான் பொறுமையாகச் சொன்னேன்,சார் என் மகளுக்காகவே இருக்கிறேன்,மற்றபடி நான் ரோஷக்காரன்,நீங்க சொல்லி 24 மணிநேரத்தில் வீட்டை காலிபண்ணிவிடுவேன், எனவே நல்ல வீடு கிடைத்தால் எப்போ வேண்டுமானாலும் போய்விடுவேன்,ஆனாலும் அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை எனக்கு உரிமையிருக்கிறதே, என்றதற்கு தனது மனைவியிடம் "என்ன.." என்று கேட்க அந்தம்மாவும் வித்தியாசமாக முகத்தை வைத்துக்கொண்டு "சரி.." என்று சொன்னது மிகவும் கேவலமாகவும் அவமானமாகவும் இருந்தது;வேதனையுடன் வெளியேறினேன்.
நான் வீட்டு உரிமையாள்ருடைய வீட்டை விட்டு வெளியேறி பத்து நிமிடங் கூட இருக்காது,ஒரு தம்பி போன் செய்து ஒரு வீடு இருப்பதாகக் கூறி அழைத்தான்; ஆவலுடனும்சலிப்புடனும் சோர்வுடனும் சென்று பார்த்தேன்; அந்த வீட்டின் உரிமையாளரான வயதான அம்மா வீடு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்;ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பினேன்;சில நாட்களிலேயே மீண்டும் அதே வீட்டிலிருந்து அழைப்பு; ஆச்சர்யமாக அதே பாட்டி இணக்கமாகப் பேசி, நமக்கென்ன ஆடி மாதம், வந்துடுங்க என்றார்கள்; அட்வான்ஸ் (Rs.50,000/-) கொடுக்காமலே குடியேறிக்கொள்ளவும் சம்மதிக்க ரெண்டே நாளில் வீட்டை காலிசெய்தேன்;
காலிசெய்யவேண்டும் என்று நச்சரித்த வீட்டு உரிமையாளர் இப்போது காலிசெய்யக்கூடாது என்றும் மூன்று மாதம் கழித்தே போகவேண்டும் என்று அழிம்பு செய்தார்;இதற்கொரு கட்டபஞ்சாயத்து,அடாவடி மிரட்டல்கள், பரியாசங்கள், பொய்யான குற்றச்சாட்டுகள்; நான் தன்னந்தனியாக இருந்தாலும் கொஞ்சமும் பயப்படாமல் எனது முடிவை உறுதியுடன் சொல்லிவிட்டேன்; எனது சக்திக்கு மீறி நான் எனது வீட்டு அட்வான்ஸாகக் கொடுத்திருந்த ஐம்பதினாயிரம் ரூபாய் (Rs.50,000/-) பணம் எந்த சேதாரமுமின்றி கிடைக்குமா என்பதில் மிகவும் சோர்ந்துபோனேன்;ஏனெனில் நான் குடியேற வேண்டிய வீட்டுக்கு இருபதாயிரம் ரூபாயாவது கொடுங்கள் என்று வேண்டியதற்கு மூர்க்கத்தனமாக மறுத்துவிட்டார்கள்;தொடர்ந்து போராடியதில் ஒரே ஒரு முன்னேற்றம்,வேறு ஆள் குடித்தனத்துக்கு வந்தாலே அட்வான்ஸ் பணம் தரமுடியும் என்ற நிலையிலிருந்து முன்னேறி ஆடி முடிந்து ஆகஸ்டு மாதம் 24 ந்தேதி பணம் தர ஒப்புக்கொண்டார்கள்;
ஆனால் இந்த ஒரு மாதத்தை நான் கடத்த மிகவும் சிரமப்பட்டேன்;மனதில் இது சம்பந்தமாக பல்வேறு காரியங்கள் ஓயாமல் ஓடிக்கொண்டே இருந்தது; மறுபுறம் ஒவ்வொருவரும் ஒருமாதிரி சொல்லி பதட்டப்படுத்தினார்கள், அவர்கள் மோசமானவர்கள்,பணத்துக்கு ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்,எனவே மறு ஆள் வந்தால் மாத்திரமே தருவார்கள்,என்றார்கள்;எனக்கு நான் ஊழியத்தில் இருப்பதால் எனக்கு கமிஷனர் முதலான உயரதிகாரிகளைத் தெரியும்; என்னை மிரட்டியதற்காகப் பாதுகாப்பு கேட்டு கேஸ் போட்டிருக்கலாம்; கொலைக்காரன் பேட்டையில் ஊழியம் செய்வதால் கொஞ்சம் கரடுமுரடானவர்களும் தெரியும்; அவர்கள் மூலம் ஒரு இலட்சம் கூட எழுதி வாங்கமுடியும்; பெரிய பெரிய வக்கீல்கள் எல்லாம் தெரியும் என்பதால் ரென்ட் கண்ட்ரோல் கேஸ் போட்டிருக்கலாம்; அண்மையில் ஜெயித்து ஆட்சியில் உள்ள எம்எல்ஏக்கள் சிலர் தெரியும் என்பதால் எல்லா வகையிலும் எனக்கே சாதகமான சூழ்நிலை.
ஆனால் நானோ கர்த்தரை நம்பி என் காரியத்தை அவரிடத்தில் சாட்டிவிட்டேன்;அட்வான்ஸ் பணம் தராத காரணத்தினால் வீட்டை காலிசெய்தபிறகு வீட்டு சாவியை வீட்டு உரிமையாளரிடம் நான் தரவில்லை;அதற்கும் ஒரு பஞ்சாயத்து நடந்தது;நான் அட்வான்ஸ் (Rs.50,000/-) கொடுத்தாலே சாவியைத் தரமுடியும் என்று பிடிவாதம் பிடிக்க பஞ்சாயத்து பேசியவர் சரி சார்,நீங்க சாவியைத் தரவேண்டாம்,உங்க பணம் முழுவதும் கழிந்த பிறகு கொடுங்க,என்று முரட்டுத்தனமாக சொல்லிவிட்டு வீட்டு உரிமையாளரிடம் இதப்பாருப்பா நீ அவருக்கு பண்ம தரவேண்டாம்,உன் பணம் கழிஞ்சதும் சாவியை வாங்கிக்க,என்று சொல்லிவிட்டு இனி இங்கே வரவேண்டாம்,என்று கூறிவிட்டு வெளியேற நான் திகைத்துப்போனேன்;ஆனாலும் கௌரவத்தை விடாமல் அமைதியாக வந்துவிட்டேன்; என்னிடம் எழுத்துப்பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை.
"அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்." (1.பேதுரு.2:23)
இந்த வசனத்தை எனதாக்கிக்கொண்டு அனைத்து சொந்த முயற்சிகளையும் விட்டு விட்டு காத்திருக்கத் தீர்மானித்தேன்;வீடு மாறினாலும் வீட்டை ஒழுங்கு செய்யாமல் மனநிலை பாதிக்கப்பட்டது போல இருந்தேன்;என்னிடம் ஜெப உதவிக்காக தொடர்புகொண்ட போன்களையெல்லாம் தவிர்க்குமளவுக்கு மனஅழுத்ததில் இருந்த என்னுடைய மனதில் இந்த வசனம் பேசியதும் ஒரு பெரிய சமாதானம் வந்தது; "ஆயத்தமா" எனும் ஆல்பத்தின் "நேற்று இன்று நாளை மாறாதவரே..." பாடல் என்னை அதிகமாக தைரியப்படுத்தி காத்திருக்கும் பெலனைக் கொடுத்தது.
என்னே ஆச்சர்யம் நான் கர்த்தருக்காகக் காத்திருந்தேன்,சரியாக எதிர்தரப்பு சொன்னவாறே,கடந்த ஆகஸ்டு மாதம் 24ம் தேதி முழு பணத்தையும் அதாவது ஆடி மாத வாடகையைப் பிடித்தம் செய்துகொண்டு கொடுத்துவிட்டார்கள்; அதனை நான் பெரிதுபடுத்தவில்லை; ஏனெனில் நான் சட்டநடைமுறைகளுக்குச் சென்றிருந்தால் எனக்கு அதைவிட பெரிய இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம்.மேலும் ஒரு மாதத்துக்கும் மேலாக எந்த முன்பணமும் கொடுக்காமலே குடிபுகுந்த வீட்டிலும் என் அவமானத்தை கர்த்தர் துடைத்து என்னை கனப்படுத்தினார்.கர்த்தருக்கே மகிமை..!
பின்குறிப்பு: பணத்தைக் கொடுக்கும்போது எனது வீட்டு உரிமையாளர் புலம்பிக்கொண்டே சொன்ன விஷயம்,மனுஷன்னா நம்பிக்கை இருக்கணும்,சார் நீங்க அட்வான்ஸ் கொடுக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்தீங்களே, அப்பவே நான் நினைச்சேன், நீங்க விவரமானவர், ஏமாளியல்ல, ஆனாலும் நாங்களெல்லாம் அப்படியல்ல, யாரையும் ஏமாற்றமாட்டோம்...என்று சொல்லிக்காட்டினார்;நான் சிரிக்கட்டுமா, அழட்டுமா..???
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)