Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆத்துமா இல்லாமல் அழிந்திடும் மாந்தர்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: ஆத்துமா இல்லாமல் அழிந்திடும் மாந்தர்
Permalink  
 


ஷமரணத்தின் பின்பு மானிட ஆத்துமாவும் அழிந்து போகும் எனும் தங்களது உபதேசத்திற்கு யெகோவாவின் சாட்சிகள் சுட்டிக் காட்டும் இன்னுமொரு வசனம் எசேக்கியேல் 18:4 ஆகும். இவ்வசனத்தில் “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மரணத்தின் பின்னர் மனிதனின் எந்த ஒரு பகுதியையும் வாழ்வதில்லை என்று யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர் (34) ஆனால் மானிட சரீரம் மரித்தாலும் அவனில் ஆவிக்குரிய பகுதி அழியாமல் இருக்கும் எனும் உண்மையை இவ்வசனங்கள் முரண்படுத்தவில்லை. ஏனென்றால் எசேக்கியயேலினுடைய காலத்தில் மக்கள் தங்கள் மூதாதையரின் பாவம் தங்களையும் பாதிப்பதாக எண்ணினர். (35) இது யாத்திராகமம் 20:5 ஐ அடிப்படையாகக் கொண்ட அவர்களது நம்பிக்கையாக இருந்தது (36) எசேக்கியேல் 18ம் அதிகாரத்தில் 2ம், 3ம் வசனங்களில் இதைப்பற்றி இஸ்ரவேலில் சொல்லப்பட்டு வந்த பழமொழி இனிமேல் சொல்லப்படுவது இல்லை என்ற தீர்க்கதரிசியின் மூலம் அறிவிக்கும் தேவன் (எசே. 18:2-3) (17) இனிமேல் பெற்றோர்களின் பாவத்திற்காக பிள்ளைகள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதைத் தெரிவிப்பதற்காக “இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்“. (எசே. 18:4)  

 

இவ்வசனத்தில் ஆத்துமா என்பது முழு மனிதனையுமே குறிக்கின்றது. எனவே, பாவம் செய்கிற மனிதனே அதன் தண்டனையான மரணத்தை அனுபவிப்பான். அவனது பெற்றோரின் பாவத்துக்கு அவன் உத்தரவாதமுடையவனல்ல என்பதே இவ்வசனத்தின் அர்த்தமாகும். உண்மையில் “சரீரப்பிரகாரமாக மரணத்தைப் பற்றியே இவ்வசனம் கூறுகிறது. (38) பாவம் செய்கின்றவன் மரணமடைவான் என்பதே இவ்வசனத்தின் நேரடி மொழிபெயர்ப்பாகும். இவ்வசனம் மரணத்தின் பின் மனிதனுடைய ஆவிக்குரிய பகுதிக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றியே எதுவும் கூறவில்லை

 

நாம் ஏற்கனவே பார்த்தப்படி புதிய ஏற்பாட்டிலே மத்தேயு 10:28 மரணத்தின் பின் மானிட ஆத்துமா உயிருடனும் உணர்வுடனும் இருக்கும் என்பதை நேரடியாக அறியத் தருகிறது. மேலும், லாசருவையும் ஐசுவரியவானையுத் பற்றி இயேசுக்கிறிஸ்து குறிப்பிடும்போது மரணத்தின் பின்னர் உணர்வுள்ள நிலையில் மனிதர்கள் இருப்பதை அறியத் தந்துள்ளார். (லூக்கா 16:22-28) யெகோவாவின் சாட்சிகள் இதை உருவக விபரணமாக ஒரு உவமையாக கருதுவதோடு, இதை எவ்விதத்திலும் சொல்லர்த்தமான சம்பவமாக விளக்க முடியாது என்று கூறுகின்றனர். இதை சொல்லர்த்தமாக விளக்கினால் தேவனுடைய மக்கள் அனைவரும் எப்படி ஆபிரகாம் எனும் ஒரு மனிதனுடைய மடியில் இருக்க முடியும்? என்றும், மனிதர் வேதனைப்படும் அளவுக்கு அக்கினி ஜூவாலை இருக்கும். இடத்தில் தண்ணீரில் தோய்த்து எடுக்கப்பட்ட விரல் நுனியின் தண்ணீர் எப்படி ஆவியாகமல் இருக்க முடியும்? என்றும் இந்த ஒரு துளி நீர் எப்படி ஒரு மனிதனுடைய தாகத்தைத் தீர்க்ககூடியதாய் இருக்கும்? என்றும் கேட்கின்றனர். (40) ஆனால் இயேசுக்கிறிஸ்து மரணத்தின் பின்பான நிலையை சொல்லர்த்தமாகவே இவ்வசனங்களில் விளக்கியுள்ளார். (41) யெகோவாவின் சாட்சிகள் கூறுவுதுபோல, ஒரு துளி நீர் தாகத்தைத் தணிக்கும் என்றோ, அக்கினி ஜூவாலையுள்ள இடத்தில் ஒரு துளி நீர் ஆவியாகாமல் இருந்தது என்றோ இயேசுக்கிறிஸ்து கூறவில்லை. ஐசுவரியவானின் வார்த்தைகள் அவனது வேதனையின் புலம்பலாகவே இருக்கின்றன. மேலும் இவ்வுவமையில் ஆபிரகாம் யெகோவா தேவனையும் ஐசுவரியவான்- பரிசேயனையும் லாசரு -இயேசுக்கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களையும் மரணம் என்பது இவ்விரு சாராரும் இவ்வுலகில் இருக்கும்போது அவர்களது நிலையில் ஏற்படும் மாற்றத்தையும் யெகோவாவின் சாட்சிகள் கூறுவது(42)  உவமையில் சொல்லப்படாத விடயங்களையெல்லாம் அதற்குள் புகுத்தும் பிழையான வேதவியாக்கியானமாகவே உள்ளது. உண்மையில் மரணத்தின் பின்பும் மனிதர்கள் உணர்வுள்ள நிலையில் இருப்பார்கள் என்பதையும் அச்சமயம் அவர்களால் தங்களது இருப்பிடங்களை மாற்றிக் கொள்ள முடியாது என்பதையும் இயேசுக்கிறிஸ்து இவ்வுவமையின் மூலம் அறிவித்துள்ளார். யெகோவாவின் சாட்சிகள் மரணத்தின் பி்னர் சரீரமும் ஆத்துமாவும் அழிந்து போகிறது என்று கூறுவது வேதத்திற்கு முரணான போதனையாகவே உள்ளது.

 

மரணத்தின் போது மனிதன் உணர்வுள்ளவானாகவே இருப்பான் என்பதை இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது தம்மோடு சேர்த்துச் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்களில் ஒருவனுக்கு கூறிய வாரத்தைகளும் அறியத் தருகின்றன. “இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்“ எனும் இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகள், தான் இயேசுக்கிறிஸ்துவுடன் இருப்பதை அறிந்திடக்கூடிய விதத்திலேயே அவன் பரதீசில் இருப்பான் என்பதை சுட்டிக் காட்டுகின்றன. இதனால் யெகோவாவின் சாட்சிகள் தங்களது உபதேசத்தை நிரூபிப்பதற்காக இவ்வசனத்தை “இன்றைக்கு நான் உனக்குச் சொல்லுகிறேன் நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய்“ என்று மாற்றியுள்ளனர். (43) இதன் மூலம், கள்ளன் அன்றைய தினம் பரதீசிலிருப்பதைப் பற்றியல்ல மாறாக, அவன் எதிர்காலத்தில் பரதீசிலிருப்பதைப் பற்றி அன்றைய தினம் இயேசுக்கிறிஸ்து அவனுக்குக் கூறுவதாக யெகோவாவின் சாட்சிகள் விளக்ககின்றனர். (44) இவர்கள் தங்கள் உபதேசமே சரியானது என்பதை நிரூபிப்பதற்காக வேதவசனங்களையே மாற்றியுள்ளமையால் இவர்களின் போதனைகள் உண்மையானவைகள் அல்ல. 

 

மரணத்தின் பின்னர் மனிதனின் சடப்பொருள் பகுதியான சரீரம் அழிந்திட ஆவிக்குரிய பகுதி தேவனிடம் செல்வதாக பழைய ஏற்பாடு அறியத் தருகிறது. (ஆதி. 3:19, பிர. 3:20, 12:7) பழைய ஏற்பாட்டில் துன்மார்க்கரின் ஆத்துமா எங்க செல்லும் என்பது பற்றிய முழுமையான வெளிப்படுத்தல்கள் கொடுக்கப்படவில்லை. பழைய ஏற்பாட்டில் மரித்தவர்கள் “பாதாளத்தில் இறங்குவதாகக்“ குறிப்பிடப்பட்டுள்ளது. (ஆதி. 37:35, 42:29, 44:31, எண் 16:30, யோபு 17:13-16, 24:19-20, சங். 31:17) ஆனால், புதிய ஏற்பாட்டில் நீதிமான்களினதும் துன்மார்க்கரினதும் ஆத்துமாக்கள் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதையும், இவ்விரு இடங்களுக்கு இடையில் பாரிய பிளவு இருப்பதையும் அறிந்து கொள்கிறோம். (லூக். 16:22-23) பழைய ஏற்பாட்டில் பாதாளம் என்பது மரித்தோரின் சரீரங்கள் செல்லும் இடமாக இருக்கையில் புதிய ஏற்பாட்டில் பாதாளம் என்பது (46) மரித்த துன்மார்க்கர் செல்லும் இடத்தைக் குறிக்கிறது(47) இதற்குக் காரணம் தமிழில் வேதாகமத்தை மொழிபெயர்த்தவர்கள் மூலமொழியில் வித்தியாசமான அர்த்தம்தரும் இருவேறுபட்ட வார்த்தைகளை “பாதாளம்“ என்று ஒரே வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ளதேயாகும். வெளிப்படுத்தல் 20:14 இல் பாதாளம் (ஹேதீஸ்) அக்கினிக் கடலில் தள்ளப்படுவதனால் அங்கு துன்மாரக்கர் மட்டுமே இருப்பது தெளிவாகின்றது. (48) மரித்த நீதிமான்கள் செல்லும் “ஆபிரகாமின் மடி் என்பது பரதீசுக்கு யூதர்கள் கொடுத்திருந்த பெயராகும். (49) மரணத்தின் பின்பு நீதிமான்களும் துன்மார்க்கரும் செல்லும் இடம் பற்றி வேதாகமம் அறியத் தருவதனால், மரணத்தோடு மானிட ஆத்துமா அழிந்து போகிறது எனும் யெகோவாவின் சாட்சிகளின் உபதேசம் வேதத்திற்கு முரணானது என்பது தெளிவாகின்றது. மரணத்தின் பின்பும் மானிட ஆத்துமா உயிருடனும் உணர்வுடனும் இருக்கும் என்பதே வேதம் போதிக்கும் சத்தியம். 

 

Footnote and Refernace 

 (34)  Anonymous, Reasoning from the Scriptures, p 169

 

(35) பபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன யூதர்க்ளுக்கே எசேக்கியேல் தீரக்கதரிசனம் உரைத்தார். பாபிலோனிலிருந்த யூதர்கள் தங்கள் மூதாதையருடைய பாவத்துக்கான தண்டனையாகவே சிறையிருப்பு இருப்பதாக கருதினார்கள். (R.H. Alexander, Ezekiel p 823) 

 

(36) உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்’ என்பது என்று தேவன் அறிவித்தள்ளார். ஒருவனுடைய பாவத்திற்காக அவனது பிள்ளையை தேவன் தண்டிப்பார் என்பது இவ்வசனத்தின் அர்த்தம் அல்ல. ஏனென்றால் உபாகமம் 24:16 பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்படவேண்டும்“ என்று தேவன் தெரிவித்துள்ளார். உண்மையில் “ஒருவனது பாவம் அவன் பிள்ளைகளையும் பாதிக்கும் என்பதே யாத்திராகமம் 20:5 அர்த்தமாகும் (F.B. Huey, Exodus Bible Commentary p 87) 

பெற்றோரின் பாவவாழ்க்கைப் பிள்ளைகளும் பின்பற்றுவதால் அவர்களும் தண்டிக்கப்படுகின்றனர்“ என்பதை இவ்வசனம் அறியத்தருகிறது. (W.C. Kaiser, Exodus Expositor;s Bible Commentary vol. p 423)

 

37) இவ்விரு வசனங்களிலும் பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச் சொல்லுகிறது என்ன? இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது

 

(40) Anonymous, Reasoning from the Scriptures, p 174-175

 

(41) இயேசுக்கிறிஸ்துவின்  உவமைகள் கற்பனைக் கதைகள் அல்ல. அவை இயேசுக்கிறிஸ்துவினுடைய காலத்தைய யூதசமுதாயத்தில் வழமையாக நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட விபரணங்களாகவே உள்ளன. “அக்காலத்தைய கிரேக்கர்கள் தரக்கரீதியான விளக்கங்களின் மூலம் போதிக்கும் முறையை உபயோகிக்கையில், யூதர்கள் மானிட வாழ்வோடு சம்பந்தப்பட்ட விடயங்களை விவரணங்களாக்கிப் போதித்தனர்.“ (W.Barclay, And Jesus Said: The parables of Jesus, pp 3-4) இயேசு கிறிஸ்துவின் உவமைகள் இவ்வாறு மானிட வாழ்வுச் சம்பவங்ளை அடிப்படையாகக் கொண்ட போதனைகளாகும். இதனால் “அவர் சொல்லிய உவமைகள் அவர் வாழ்ந்த சமுகத்தைப் பிரதிபலிப்பனவாய் உள்ளன. (D.Wenham, The Parables of Jesus : Pictures of Revolution p. 13)

 

(42)   Anonymous, Reasoning from the Scriptures, p 175

 

(43) Ibid pp 287-288 ஆங்கிலத்தில் அரைப்புள்ளியை மாற்றியதன் மூலமாக யெகோவாவின் சாட்சிகள் தங்களது கருத்தை இவ்வசனத்தில் புகுத்தியுள்ளனர். அதாவது ‘I tell you the truth, today you will be with me in paradise’ என்பதில் truth என்பதற்கு அடுத்துள்ள அரைப்புள்ளியை today என்பதற்குப் பிறகு இடுவதன் மூலம் அதாவது ‘I tell you the truth today, you will be with me in paradise’ என்று மாற்றுவதன் மூலம் தங்களது உபதேசத்திற்கு ஆதாரமாக இவ்வசனத்தை மாற்றியுள்ளனர். 

 

(44)  Anonymous, Reasoning from the Scriptures, p 287

 

(45) பாதளம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “ஷியொல்“ எனும் எபிரேயப் பதம் பழைய ஏற்பாட்டில் 65 தடவைகள் இடம்பெறுவதோடு, “கல்லறை“ “குழி“ “நரகம்“ “பாதளம்“ என்று பலவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

 

(46) மூலமொழியில் “ஹேதீஸ்“ எனும் கிரேக்க பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது. சில தமிழ் வேதாகமங்களில் இதை “ஆதீசு“ என்று எழுதியுள்ளனர். 

 

(47) தமிழ்வேதாகமத்தில் பாதளம் என்பது பழைய ஏற்பாட்டில் ஒரு அர்த்தத்திலும் இருப்பதை நாம் கருத்திற்கொள்ள வேண்டியது அவசியம். 

 

(48) ஹேதீஸ்சில் இருக்கும் துன்மார்க்கரின் ஆத்துமாக்கள், சரீரத்தோடு மறுபடியுமாகச் சேர்க்கப்பட்டு (இதுவே உயிர்த்தெழுதுல்) அவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள் (இதுவே இரண்டாம் மரணம்) .இது இயேசுகிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் முடிவில் நடைபெறும் என்று வெளிப்படுத்தல் 20ம் அதிகாரம் கூறுகிறது.

 

(49) J.Blanchard, Whatever Happened to Hell? P 38

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

நூல் யெகோவா சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்

ஆசிரியர் – சகோ. வசந்தகுமார்

வெளியீடு – இலங்கை வேதாகமக் கல்லூரி

 

முன்னுரை

மானிடவாழ்வின் இறுதிநிலை பற்றி யெகோவா சாட்சிகள் போதிக்கும் விடயங்களும் வேதாகம உபதேசத்தை முரண்படுத்தும் வேதப்புரட்டாகவே உள்ளது. மரணத்தோடு மானிட வாழ்வு முற்றுப்பெறுவதாகக் கூறும் இவர்கள், மனிதனில் ஆத்துமா என்ற அழைக்கப்படும் அழியாத நித்திய ஆவிக்குரிய பகுதி இருப்பதை மறுதலிக்கின்றனர். (1) மனிதன் மரிக்கும்போது அவனது சரீரம் அழிவதுபோல ஆத்துமாவும் அழிந்துபோகிறது (2) என்று போதிக்கும் இவர்கள் மரணத்தின் பின்பும் மனிதன் உணர்வுடன் இருப்பதையும், துன்மார்க்கர்கள் உயிர்தெழுந்து நித்திய காலமாக நரகத்தில் துயரப்படுவார்கள் என்பதையும் மறுதலிக்கின்றனர். மேலும் யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுவார்கள் என்று கூறும் இவர்கள் தங்களில் 144000 பேர் பரலோகத்திலும் ஏனையவர்கள் பூமியிலும் நித்திய காலமாக வாழ்வார்கள் என்றும் விளக்குகின்றனர். மானிட வாழ்வின் இறுதிநிலை பற்றிய யெகோவாவின் சாட்சிகளின் இத்தகைய வேதப்புரட்டு உபதேசங்கள் இப்பகுதியில் ஆராயப்பட்டுள்ளன.

மானிட ஆத்துமாவைப் பற்றிய யெகோவா சாட்சிகளின் உபதேசம் வேதத்திற்கு முரணான போதனையாகவே உள்ளது. ஏனென்றால், இவர்கள் மானிட ஆத்துமாவின் அழியத் தன்மையை மறுதலிக்கும் வேதப்புரட்டர்களாய் உள்ளனர். இவர்களைப் பொறுத்தவரை மானிட உயிரே வேதாகமத்தில் ஆத்துமா என்று அழைக்கப்படுகின்றது. (3) தேவன் முதல் மனிதனான ஆதாமை சிருஷ்டித்தபோது  அவன் “ஜீவிக்கிற ஜீவாத்துமாவானான்“ (ஆதி. 2:7) என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதனால், “ஆத்துமா என்பது மனிதனுடைய உயிர் என்று யெகோவா சாட்சிகள் கருதுகின்றனர்.(4) இயேசுவிற்கு கூட அழியாத ஆத்துமா இருக்கவில்லை என்று  கூறும் இவர்கள் அவர் மரித்தபோது, அவரது ஆத்துமாவும் மரித்தது என்று வாதிடுகின்றனர். (5) மனிதன் மரிக்கும்போது அவனது சரீரம் அழிவது போலவே அவனது ஆத்துமாவும் அழிந்து போகிறது(6) எனும் இவர்களது போதனை, சரீர மரணத்தின் பின்பும் மானிட ஆத்துமா உணர்வுடன் நித்திய காலமாய் இருக்கும் எனும் வேதாகம உபதேசத்திற்கு எதிரானதாகவே உள்ளது. மரணத்தின் பின்பு ஆத்துமாவுக்கு உணர்வுள்ள வாழ்வு இல்லை என்பதே இவர்களது போதனையாக உள்ளது(7) 

 

திரித்துவ உபதேசத்தைப் போலவே, மானிட ஆத்துமாவின் அழியத்தன்மை பற்றிய போதனையும் சாத்தானால் உருவாக்கபட்டது என்று யெகோவாவின் சாட்சிகள் கருதுகின்றன. விலக்கப்பட்ட கனியைப் புசித்தால் நீங்கள் சாவீர்கள் என்று தேவன் கூறியிருந்தார். ஆனால் சாத்தானோ அதைப் புசித்தால் மரணம் சம்பவிக்காது என்று சொல்லியும், அதைப் புசித்த ஆதாமும் ஏவாளும் பிற்காலத்தில் மரணமடைந்தார்கள் என்பதைச் சுட்டிக் காட்டும் இவர்கள் (ஆதி. 3) மானிட ஆத்துமா சாகாது என்னும் பொய்யைச் சாத்தான் இவ்விதமாகக் கிறிஸ்தவத்துக்குள் கொண்டுவந்துள்ளான் என்று கூறுகின்றனர். (8) இதைப் போலவே நரகம் பற்றிய கிறிஸ்தவப் போதனையும் சாத்தானால் உருவாக்கப்பட்டது என்பதே யெகோவா சாட்சிகளின் கருத்தாகும் (9) இவர்களைப் பொறுத்தவரை கல்லறையே வேதத்தில் நரகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (10)

 

உண்மையில்  ஆத்துமா என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள வார்த்தைக்கு “உயிர்“ எனும் அர்த்தம் மட்டுமே உள்ளது என்று யெகோவாவின் சாட்சிகள் கருதுவது பெருந்தவறாகும். இவர்கள் கூறுவதுபோல ஆதியாகமம் 2 :7 .இல் ஆத்துமா எனும் பதம் மானிட உயிரையே குறிக்கின்றது என்பது உண்மையென்றாலும் வேதாகமத்தில் இப்பதம் பலவிதமான அர்த்தங்களுடன் உபயோகிக்கப்பட்டுள்ளது. மூலமொழியில் ஆத்துமா என்பதற்கு “நெப்ஃபெஃஷ்” (nephesh) எனும் எபிரேயப் பதமும் புதிய ஏற்பாட்டில் “சூகே“ (psuche) என்னும் கிரேக்க பதமும் உபயோகிக்கப்பட்டுள்ளது. இவை மனிதனின் ஆவிக்குரிய பகுதியின் (Spiritual part) (11) பல்வேறு அம்சங்களையும் குறிக்கும் பதங்களாகும். பழைய ஏற்பாட்டில் மனிதனின் ஆவிக்குரிய பகுதி “உள்ளான மனிதன்“ (inner self) என்றும் சடப்பொருள் பகுதி “வெளித்தோற்றம்” (outer appearance) என்று கருதப்படுவதோடு (12) 754 தடவைகள் உள்ளான மனிதனைக் குறிப்பிட “நெப்ஃபெஃஷ்” (nephesh) எனும் எபிரேயப் பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது. (13) எனினும் இவற்றில் 110 தடவைகள் மட்டுமே இப்பதத்தை “ஆத்துமா“ என்று மொழிபெயர்க்கலாம் (14) இதனால் தான் தற்கால ஆங்கில வேதாகமங்களில் இப்பதம் ஆத்துமா என்று மட்டுமல்ல உயிர்/ஜீவன் (Life) சுயம்(self) இதயம்(Heart) நபர்(being)  என பலவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (15) இதேவிதமாக பதிய ஏற்பாட்டிலும் “சைக்கி“ எனும் பதம் நூற்றுக்கும் அதிகமான தடவைகள் இடம் பெற்றாலும் 19 தடவைகள் மட்டுமே ஆத்துமா என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (16) ஆனால் நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமம் ஜேம்ஸ் அரசனது ஆங்கில வேதாகமத்தை தழுவிய மொழிபெயர்ப்பாய் இருப்பதனால் (17) பழைய ஏற்பாட்டில் 400 இறகும் அதிகமான தடவைகளும் புதிய ஏற்பாட்டில் 39 தடவைகளும் ஆத்துமா என்னும் பதம் உள்ளது. இப்பதம் சில இடங்களில் மானிட உயிரை அல்லது முழு மனிதனையும் குறிக்க உபயோகிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய இடங்களில் உள்ளான மனிதனின் பல்வேறு அம்சங்களையும் குறிக்கின்றன. (18) ஆதியாகமம் 2:7 இல் மண்ணினால் தாம் செய்த மானிட சரீரத்திற்குள் தேவன் ஜீவசுவாசத்தை ஊதியபோது அவன் “ஜீவாத்துமாவானான்“ எனும் வாக்கியம் மூலமொழியின்படி தேவனுடைய சுவாசம் மனிதனுக்கு உயிரைக் கொடுத்தது.” என்றே கூறுகிறது (19) மூலமொழியில் “ஜீவாத்துமா” எனும் பதமே ஆதியாகமம் 1:20, 2:19, 9:9 இல் ஏனைய உயிரினங்களின் ஜீவனைக் குறிக்க உபயோகிக்கப்பட்டுள்ளமை இதை உறுதிப்படுத்துகி்னறது. (20)

 

ஆதியாகமம் 2:7 நெப்ஃபெஃஷ்” (nephesh) எனும் எபிரேயபதம் மானிட உயிரையே குறித்தாலும், இது மனிதனில் அழியாத ஆவிக்குரிய பகுதி இருப்பதை மறுதலிக்கவில்லை. நாம் ஏற்கனவே பார்த்தபடி, மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள பதம் உயிரை மட்டும் குறிக்கும் பதம் அல்ல. (21) மனிதனின் ஆவிக்குரிய பகுதியே அதாவது உள்ளான மனிதனே வேதத்தில் பொதுவாக ஆவி/ஆத்துமா எனும் பதத்தின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது (22) அக்காலத்தைய யூதர்களும் கிரேக்கர்களும் சரீரத்திலிருந்து ஆத்துமா  பிரிவடைவதையே மரணமாகக்க் கருதினார்கள்.(23) மானிட சரீரம் மரித்த பின்பும் அதாவது சரீரத்தை விட்டு பிரிந்த பின்பும் ஆத்துமா அழியாமல் இருக்கும் என்று மத்தேயு 10:28 இல் இயேசுக்கிறிஸ்து தெரிவித்துள்ளார்.  ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள் எனும் இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகள் ஒருவனது சரீரம் மரித்தாலும் அவனது ஆத்துமா அழியாது என்பதை அறியத்தருகிறது. “மரணத்தின் பின்பும் உயிரோடிருக்கும் மானிடப் பகுதியையே இயேசுக்கிறிஸ்து இவ்வசனத்தில் ஆத்துமா என்று குறிப்பிட்டுள்ளார். (24) மரணத்தின் பின்னர் மானிட ஆத்துமாக்கள் உயிருடன் இருப்பதினால்தான் வெளிப்படுத்தல் 6:9-10 இல் இரத்தசாட்சிகளாக மரித்தவர்களுடைய ஆத்துமாக்களை யோவான் பலிபீடத்தின் கீழ் கண்டது மட்டுமல்ல அவை தேவனோடு பேசுவதையும் கேட்டார்(25) இவ்விரு வசனங்களும் யெகோவா சாட்சிகளின் உபதேசத்திற்கு முரணாக, மானிட சரீரம் மரித்த பின்பும், ஆத்துமா உயிரு்டனும் சுய உணர்வுடனும் இருக்கும் என்பதை அறியத் தருகி்ன்றன. 

 

மரணத்தின் பின்னர் உணர்வுள்ள நிலையில் மானிட ஆத்துமா இருக்காது எனும் தங்களது கருத்தை நிரூபிப்பதற்கு யெகோவா சாட்சிகள் சங்கீதம் 146:4, பிரசங்கி 9:5, எசேக்கியேல் 18:4 எனும் வசனங்களைச் சுட்டிக் காட்டுவது வழமை. சங்கீதம் 146:6 இல் “அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு மரணத்தின் பின் மனிதனுடைய யோசனைகள் அழிந்து போவதினால் அவன் உணர்வுள்ளவாய் இருக்க மாட்டான் என்று யெகொவா சாட்சிகள் கூறுகின்றனர். (26) ஆனால், மரணத்தின் பின் மனிதன் எவ்வித சிந்தனையும் அற்றவனாக இருப்பான் என்று கூறவில்லை. ஏனென்றால் இங்கு “யோசனைகள்“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மனிதனுடைய “திட்டங்கள்“ “நோக்கங்கள்“ எதிர்காலத்தைப் பற்றிய யோசனைகள்“ என்பவற்றையே குறிக்கின்றது (27) இரு ஏற்பாடுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட நூலொன்றில் இவ்வித அர்த்தத்துடனான கூற்றை நாம் அவதானிக்கலாம். (28) எனவே, “மனிதன் மரிக்கும்போது அவன் போட்டிருந்த திட்டங்களும் அழிந்து போகின்றன“(29) என்று இவ்வசனம் கூறுகிறதே தவிர அவன் உணர்வற்றவனாக இருப்பான் என்பது இவ்வசனத்தின் அர்த்தம் அல்ல. 

 

பிரசங்கி 9:5 இல் “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்“ என்று குறிப்பிடப்பட்டிருப்பதனால், மரணத்தின் பின் மனிதன் எவ்வித உணர்வும் அற்றவனாகிவிடுவான் என்று யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். (30) ஆனால் இவ்வசனத்தில் “மரித்தவனுக்கு இவ்வுலக அனுபவங்கள் எதுவும் இருக்காது“ (31) என்பதையே பிரசங்கி சுட்டிக்காட்டுகிறார். ஏனென்றால் இவ்வசனம் இடம்பெறும் பகுதியில் உயிரோடிருப்பவனுக்கும் மரித்தவனுக்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டைச் சுட்டிக் காட்டும் பிரசங்கி, இவ்வசனத்தின் ஆரம்பப்பகுதியில், உயிரோடிருக்கிறவன் அறிந்திருக்கும் விடயத்தை மரித்தவனால் அறியமுடியாது என்று கூறுவதோடு, உயிரோடிருக்கிறவன் தனக்கும் ஒருநாள் மரணம் சம்பவிக்கும் என்பதை அறிந்திருக்கிறான் என்றும், மரித்தவனுக்கு இவ்வித அறிவு இல்லை என்று கூறுகிறாரே தவிர யெகோவாவின் சாட்சிகள் சாட்சிகள் கூறுவது போல், மரி்த்தவனுக்கு எவ்வித உணர்வும் இல்லை என்று கூறவில்லை. மேலும், “மரணத்தை விட உயிரோடிருப்பதே மேலானது எனும் தர்க்கத்திற்கு ஒரு ஆதாரமாகவே இவ்விடயத்தை பிரசங்கி இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளார். (32) எனவே, இவ்வசனத்தை மரணத்தின் பின்பான மானிட வாழ்வு பற்றிய உபதேசமாகக் முடியாது. மேலும், புதிய ஏற்பாட்டிலேயே மரணத்தின் பின்பான வாழ்வு பற்றிய முழுமையான வெளிப்படுத்தல் கொடுக்கப்பட்டுள்ளமையால், இத்தகைய வெளிப்படுத்தல் அற்ற காலத்தில் பிரசங்கி கூறியதை ஆதாரமாகக் கொண்டு மரணத்தின்பின் மனிதன் எவ்வித உணர்வும் அற்றவனாகவே இருப்பான் என்று கூறுவது தவறாகும் (33)

(அடுத்த பதிப்பில் நிறைவுபெறும்)

 

Foot note and References

(1) Anonymous, Let God be True, p. 69

(2) Ibid pp 74-75

(3) A. Hoekema, The Four Major Cults p.265

(4) Anonymous, Let Your Name be Sanctified, p. 44

(5) Anonymous, Let God be True, p. 200;

(6) Anonymous, Reasoning from the Scriptures, pp 383-384

(7) Anonymous, You can Live Forever in Paradise on Earth. p. 88

(8) Anonymous, Reasoning from the scriptures, pp 101; Anonymous, Let God be True p. 75 

(9) Anonymous, Reasoning from the scriptures, pp 175; Anonymous, Let God be True p. 68

(10) Anonymous, You can Live Forever in Paradise on Earth. p. 83

ஆனால் நரகம் என்பது தேவனை நிராகரிப்பவர்கள் நித்தியகாலமாய் வேதனைப்படும் என்பதை மத்தேயு 8:11-12, 13:42, 13:50, லூக்கா 13:28, 16:19-31, வெளிப்படுத்தல் 14:9-11, 9:20 போன்ற வசனங்கள் அறியத் தருகின்றன. 

(11) வேதாகமப் போதனையின்படி மனிதனில் சடப்பொருள் பகுதி, ஆவிக்குரிய பகுதி என்று இரு பகுதிகள் உள்ளன. சடப்பொருள் பகுதியில் மானிட சரீரத்தின் மாமிசம், எலும்பு, இரத்தம் போன்றவை உள்ளன. ஆவிக்குரிய பகுதியில் ஆவி, ஆத்துமா, மனம், சிந்தை போன்றவை உள்ளன. இவற்றில் சடப்பொருள் பகுதி சரீரம் என்றும் ஆவிக்குரிய பகுதி ஆவி/ஆத்துமா என்றும் அழைக்கப்படுகின்றது

(12) W.E. Vine, M.F. Unger & W. White ed. Vine’s Expository Dictionary of Biblical Words, p. 238 

(13) H.W. Wolff, Anthropology of the Old Testament, pp 10-25

(14) இது NIV ஆங்கில மொழிபெயர்ப்பின்படியான கணிப்பீடு KJV மொழிபெயர்ப்பில் 28 வித்தியாசமான வார்த்தைகள் இப்பதத்திற்கு உபயோகிக்கப்பட்டிருந்தாலும் 419 தடவைகள் ஆத்துமா என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமம் KJV  மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டிருப்பதனால் 400 இற்கும் அதிகமான தடவைகள் ஆத்துமா எனும் பதமே உள்ளது

(15) W.E. Vine, M.F. Unger & W. White ed. Vine’s Expository Dictionary of Biblical Words, p. 237

(16)  உண்மையில் “சூகே“ எனும் கிரேக்க பதிய ஏற்பாட்டில் 11 விதமான அர்த்தங்களுடன் உபயோகிக்கப்பட்டுள்ளது. (Ibid pp. 588, 569)

(17) நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டபோது ஜேம்ஸ் அரசனது ஆங்கில வேதாகமமே உபயோகத்தில் இருந்தமையால், தமிழில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும்போது மூலமொழிக்கும் ஜேம்ஸ் அரசனது ஆங்கில மொழிபெயர்ப்பிற்கும் இடையில் வித்தியாசங்கள் இருந்ததால் தமிழ்மொழிபெயர்ப்புக் குழு ஜேம்ஸ் அரசனது ஆங்கிலமொழிபெயர்ப்பையே (KJV) பின்பற்ற வேண்டும் என சென்னை வேதாகமச் சங்கம் நிபந்தனை விதித்திருந்தது. இதனால் நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமம் ஜேம்ஸ் அரசனது ஆங்கில வேதாகமத்தின் தழுவலாகவே உள்ளது. (மேலதிக விபரங்களுக்கு ஆசிரியரின் புனித வேதாகமத்தின் புதுமை வரலாறு எனும் நுலினை பார்க்கவும்)

(18) W.F. Arndt & G.F. Wilbur, A Greek-English Lexicon of the New Testament and other Early Christian Literature, pp 674-675, 893-894, F. Brown, S.R. Driver, and C.A. Briggs, A Hebrew English Lexicon of the Old testament, pp 659-661, 924-925

(19) W.W.Wiersbe, Be Basic : An Old Testament Study – Genesis 1-11, p 167

(20) G.J. Wenham, Genesis 1-15: World Biblical Commentary Vol, p. 60

(21) F.Brown, S.R. Driver & C.A. Briggs, A Hebrew and English Lexicon of the Old Testament p 659

(22) வேதத்தில் ஆவியும் ஆத்துமாவும் ஒத்தக்கருத்துள்ள சொற்களாக உபயோகிக்கப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். உதாரணத்திற்கு மரணத்தின்போது சரீரத்தைவிட்டு ஆவி பிரிவடைந்து செல்வதாக பிரசங்கி 12:7   கூறுகையில் ஆதியாகமம் 35:18 இல் ஆத்துமா பிரிவடைந்தது செல்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால்தான் மரித்தவர்கள் ஒன்றில் “ஆத்துமாக்கள்“ என்றோ (வெளி 6:9) அல்லது ஆவிகள் என்றோ (எபி. 12:23, 1 பேதுரு 3:19) வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர் அதேபோல் யோவான் 12:27 இல் இயேசுகிறிஸ்து தனது ஆத்துமா கலங்குவதாகக் கூறுகையில் இதை அவர் ஆவியில் கலங்கியதாக யோவான் குறிப்பிட்டுள்ளார். (யோவான் 13:21) இதைவிதமாக மனிதனும் ஒன்றில் “சரீரமும் ஆவியும்“ என்று (1 கொரி. 5:5) அல்லது “சரீரமும் ஆத்துமாவும்“ (மத் 10:28) என்று குறிப்பிடப்பட்டுள்ளான். 

(W.Grudem, Systematic Theology An Introduction to Biblical Doctrine, pp 473-477)

(23) R.Gundry, The Use of the Testament in St. Mathew’s Gospel, p 197

(24) L. Morris, The Gospel According to Mathew: The Pillar New Testament Commentary, p 262

(25) யோவான் இதைப்பற்றி எழுதும்போது  அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். 10 அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.“ என்று குறிப்பிட்டுள்ளார். 

(26) Anonymous, Reasoning from the Scriptures, p 383

(27) L. Harris, ed, Theological Word Book of the Old Testament Vol. 2, p 1056

(28) ‘Today he may be high in honour, but tomorrow there will be no trace of him, because he will have returned to the dust and all his schemes come to nothing’ (1 Maccabess 2:63)

(29) W.A. VanGemeren, Psalms, Expositor’s Bible Commentary Val 5, p 865

(30) Anonymous, Reasoning from the Scriptures, p 169

(31) M.A. Eaton, Ecclesiastes : Tyndale Old Testament Commentaries, p 126 

(32) R.Murphy & E.Huwiler, Proverbs, Ecclesiastes Songs of Songs : New International Biblical Commentary p. 208

(33) வேதாகம உபதேசங்கள் புதிய ஏற்பாட்டிலேயே முழுமையாக விளக்கப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டில் பகுதியளவில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் புதிய ஏற்பாட்டில் முழுமையான விளக்கங்களுடன் உள்ளன. எனவே பழைய ஏற்பாட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, ஒரு உபதேசத்தை உருவாக்குவது தவறாகும். புதிய ஏற்பாட்டின் அடிப்படையிலேயே பழைய ஏற் பாட்டை வியாக்கியானம் செய்வதற்கான அடிப்படை விதிமுறையாகும் இதிலிருந்து பழைய ஏற்பாடு தவறானது என்று நாம் கருதலாகாது. தேவன் தம்மைப் பற்றி மக்களுக்கு வெளிப்படுத்தும்போது ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் முழுமையாக வெளிப்படுத்தாமல் பகுதி பகுதியாகவே வெளிப்படுத்தியுள்ளார். இதனால் பழைய ஏற்பாட்டின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் ஆரம்பமான தேவனது வெளிப்படுத்தல் புதிய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகமான வெளிப்படுத்தலிலேயே நிறைவு பெற்றது. எனவே, முழு வேதாகமத்தையும் அடிப்படையாக்க் கொண்டே ஒரு உபதேசம் உருவாக்கப்பட வேண்டும் வேதாகமத்தின் ஒரு பகுதியில் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தலை மட்டும் அடிப்படையாக்க் கொண்டு ஒரு உபதேசத்தை உருவாக்குவது தவறாகும். தேவன் படிப்படையாகவே தம்மை மக்களுக்கு வெளிப்படுத்தினார் என்பதே எபிரேயர் 1:1-2 அறியத் தருகிறது. “1 பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், 2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்“ என்னும் வசனத்தில் பங்குபங்காகவும்“ என்பது மூலமொழியின்படி “பகுதி பகுதியாக“ அல்லது “கொஞ்சமாக கொஞ்சமாக என்றும் வகைவகையாக என்பது வித்தியாசமான முறைகளில் என்றும் பொருள்படும். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard